ஐதராபாத் செல்வதற்காக கோயம்புத்தூர் விமான நிலையம் வந்த தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: “கோவையிலும் மழை வருவது போல் உள்ளது. சென்னை மாதிரி விடாமல் ஆட்சியாளர்கள் கோவையில் உரிய தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுத்திருந்தால் சென்னை இந்த அளவிற்கு தத்தளித்துருக்காது.
நேற்று ஶ்ரீரங்கம் கோவிலில் நடந்த சம்பவம் மிகுந்த மன வருந்தம் அளிக்கிறது. அமைச்சர் சேகர்பாபு, 1000 குடமுழுக்கு நடத்தியதாக பெருமிதம் கூறுகிறார். இங்கு ரத்த முழுக்கு நடந்துள்ளது.
வெளி மாநிலத்தவர் வந்து சண்டையிட்டார்கள், அதனால் இந்த சம்பவம் நடந்தது என கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. கோவில்களில் முறையான நிர்வாகம் இல்லை என்பதை இச்சம்பவம் எடுத்து காட்டுகிறது.
வைகுண்ட ஏகாதசி ஆரம்பிக்கும் நிலையில் ஶ்ரீரங்கம் கோவில் மூட வேண்டிய நிலை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்து மதத்தின் மீது நடக்கும் தாக்குதல் இது. வேறு மாநிலத்தவர்கள் நம் மாநிலத்தின் கோவில்களுக்கு வரும்போது அதிக பாதுகாப்பு தான் கொடுக்க வேண்டும்.
கோவில்களின் நிர்வாகம், பாதுகாப்பு நடவடிக்கை, அடிப்படை கட்டமைப்பு ஆகியவற்றை சரிசெய்ய வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை.
காஷ்மீர் முழுவதுமாக நம்மோடு இணைந்திருக்கிறது என்பதற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஆதாரமாக உள்ளது. அதையும் திமுக எதிர்க்கிறது. தேசவிரோத கருத்துக்களை பகிர பெரியாரை கேடயமாக பயன்படுத்தி அவமரியாதை செய்கிறார்கள். மாநில பிரிவினைக்கு பெரியாரின் கருத்துக்களை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பெண்களுக்கு உரிமை கொடுக்கும் கட்சி தான் மத்தியில் ஆட்சியில் உள்ளது. பழங்குடி பெண் என தெரிந்தும் திமுக ஜனாதிபதிக்கு ஓட்டு போடவில்லை.
கச்சத்தீவு உட்பட திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடந்த காலங்களில் தாரைவார்த்தவை அனைத்தும் பிரதமர் மோடியின் ஆட்சியில் மீட்கப்பட்டு வருகிறது.
கல்வி மாநில பட்டியலில் இருக்க வேண்டும் என இன்று கேட்பவர்கள் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இது போன்ற மாநில உரிமைகளை கேட்டுப் பெறவில்லை.
கேரளாவின் ஆளுநர் தாக்கப்பட்டுள்ளார். தமிழகம், கேரளா உட்பட அனைத்து பகுதிகளிலும் ஆளுநர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மற்ற பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் எதிர்கட்சிகள் கேரள ஆளுநர் தாக்குதலுக்கு எதுவும் பேசவில்லை. கருத்தை கருத்தாக எதிர்கொள்ளாமல் ஆளுநரை தாக்குவதை வன்மையாக கண்டிக்கிறேன்.
உதயநிதி தனது வார்த்தைகளை அடக்கவில்லை என்றால் திமுக மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளுக்குள்ளேயே எதிர்மறை தலைவராக தான் பார்க்கப்படுவார்' என தெரிவித்தார்.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“