தெலுங்கு தேசம் கட்சி (டி.டி.பி) விஜயநகர எம்.பி. காளிசெட்டி அப்பள நாயுடு, மூன்றாவது குழந்தை பெற்றுக்கொண்டால், பெண்களுக்கு ரூ.50,000 அல்லது ஒரு பசுவை வழங்குவதாக அறிவித்திருப்பது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய டி.டி.பி எம்.பி. காளிசெட்டி அப்பள நாயுடு, ஒரு பெண் மூன்றாவது குழந்தை பெண் குழந்தையைப் பெற்றால், அவரது சம்பளத்தில் இருந்து ரூ.50,000 வழங்கப்படும் என்றும், அந்தக் குழந்தை ஆண் குழந்தையாக இருந்தால், அவருக்கு ஒரு பசுவை தருவதாக அறிவித்தார்.
ஆங்கிலத்தில் படிக்க:
முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட மூத்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள், மாநிலத்தில் குறைந்து வரும் இளைஞர்களின் மக்கள் தொகை குறித்தும், அதை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசி வரும் நிலையில், அப்பள நாயுடுவின் அறிவிப்பு வைரலாகியுள்ளது.
"பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் நாயுடு ஆகியோர் மூன்றாவது குழந்தையைப் பெறுவதற்கான சலுகைகளுடன், மக்கள்தொகை வளர்ச்சிக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விடுத்த கோரிக்கைகளைத் தொடர்ந்து எனது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், மேலும், மூன்றாவது குழந்தை பிறந்தால் நாங்கள் ஊக்கத்தொகை வழங்குவோம்” என்று இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய அப்பள நாயுடு கூறினார்.
பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மார்காபூரில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில், அனைத்து பெண் ஊழியர்களுக்கும் குழந்தை பிரசவ நேரத்தில் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் நாயுடு அறிவித்திருந்தார். அனைத்து பெண்களுக்கும் ஒரு செய்தியை அனுப்பி, வரும் ஆண்டுகளில் மாநிலத்தில் இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிந்தவரை அதிகமான குழந்தைகளைப் பெற வேண்டும் என்று முதல்வர் மீண்டும் வலியுறுத்தினார்.
பெண் காவலர்களுக்கு குழந்தை பிறப்பு எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சர் வி. அனிதா அறிவித்தார். இதுவரை, பெண் ஊழியர்கள், குறிப்பாக பெண் காவலர்களுக்கு, ஆறு மாதங்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டது, ஒவ்வொருவருக்கும் இரண்டு பிரசவங்களுக்கு மட்டுமே முழு ஊதியம் வழங்கப்பட்டது. சனிக்கிழமை, முதல்வரும் உள்துறை அமைச்சரும் ஒரு பெண் ஊழியருக்கு எத்தனை குழந்தைகள் இருந்தாலும், அனைவருக்கும் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தனர்.
முதல் முறையாக எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்ட அப்பளநாயுடு, பத்திரிகையாளராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர். அடிப்படை நிர்வாகப் பிரச்சினைகள் குறித்து தெலுங்கு தேசம் கட்சியினருக்கு பயிற்சி அளித்து வந்தார். 2024 தேர்தல் அப்பள நாயுடுவின் முதல் தேர்தல் பயணமாகும். ஏனெனில், அவர் நாயுடுவால் ஆச்சரியப்படும் விதமாக கடைசி நிமிடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 51 வயதான இவர் தெலுங்கு தேசம் கட்சியில் 25 ஆண்டுகளாக உள்ளார். 2004-ம் ஆண்டில், தெலுங்கு தேசம் கட்சியின் மனிதவள மேம்பாட்டுப் பிரிவில் உறுப்பினரானார். மேலும், விஜயநகரத்தில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் வட ஆந்திரப் பயிற்சி நிறுவனத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.