/tamil-ie/media/media_files/uploads/2018/02/murder-knife.jpg)
மத்தியப் பிரதேசத்தில் தந்தை மற்றும் 8 வயது சகோதரனைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் டீன் ஏஜ் பெண் 2 மாதங்களுக்குப் பிறகு ஹரித்வாரில் கைது
இரண்டு மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த பின்னர், மத்தியப் பிரதேசத்தில் தனது தந்தை மற்றும் எட்டு வயது சகோதரனைக் கொன்ற சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 15 வயது சிறுமி ஹரித்வாரில் புதன்கிழமை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
போலீஸாரின் கூற்றுப்படி, 19 வயது இளைஞனுடனான அவரது உறவை அவரது தந்தை ஏற்கவில்லை. இதனால் கோபமடைந்த சிறுமி 19 வயது இளைஞனின் உதவியுடன் தனது தந்தையைக் கொன்று, பின்னர் அவரது உடலை வெட்டியுள்ளார். கண்விழித்து சம்பவத்தை பார்த்த எட்டு வயது சகோதரரும் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மார்ச் 15 ஆம் தேதி காலை, ஒரு போலீஸ் குழு சிறுமியின் வீட்டிற்கு சென்றபோது, வீடு வெளியில் இருந்து பூட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் கதவை உடைத்துத் திறந்தபோது, இரண்டு உடல்கள் - தந்தை தரையில் மற்றும் எட்டு வயது சிறுவன் குளிர்சாதன பெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
ஹரித்வாரில் உள்ள மாவட்ட மருத்துவமனை அருகே 19 வயது இளைஞனுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்தபோது, சிறுமியை விசாரணைக்காக காவலில் எடுத்ததாக ஹரித்வார் எஸ்.எஸ்.பி பர்மேத்ரா டோபால் கூறினார், அந்த ஆண் நண்பர், போலீஸ் விசாரணையில் இருந்து தப்பினார்.
“போலீஸின் வழக்கமான சோதனையின் போது, மாவட்ட மருத்துவமனைக்கு அருகில் ஒரு ஜோடியைப் பற்றிய தகவல் கிடைத்தது. அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர், ஆனால் அந்த நபர் காவல்துறையினரிடம் இருந்து தப்பினார். விசாரணையின் போது, ஜபல்பூரில் (மத்திய பிரதேசத்தின் மாவட்டம்) தனது தந்தை மற்றும் சகோதரனைக் கொலை செய்ததற்காக தேடப்படுவதாக சிறுமி தெரிவித்தார். நாங்கள் ஜபல்பூர் போலீசாரை தொடர்பு கொண்டபோது, அவர்கள் இதை உறுதி செய்தனர். ஜபல்பூர் போலீசாரும் இங்கு விசாரணைக்கு வருகிறார்கள், அதன் பிறகு, சிறுமியை அவர்களிடம் ஒப்படைப்போம்,” என்று எஸ்.எஸ்.பி டோபால் கூறினார், மேலும் ஜபல்பூர் காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கொலைக்கு முன், கடந்த ஆண்டு சிறுமி அளித்த புகாரின் பேரில், 19 வயது இளைஞன் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார், ஆனால் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இரட்டைக் கொலையில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டதாக போலீசார் முதலில் நம்பிய நிலையில், அந்த நேரத்தில் சம்மந்தப்பட்ட அந்த ஆணும் பெண்ணும் ஒன்றாக இருந்ததைக் காட்டும் சிசிடிவி காட்சிகளைக் கண்டறிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கொலைக்குப் பிறகு, இருவரும் மதன் மஹால் ரயில் நிலையத்தில் காணப்பட்டனர், அங்கு அவர்கள் ஆட்டோரிக்ஷாவை எடுத்துக்கொண்டு பேருந்து நிலையத்திற்குச் செல்வதற்கு முன்பு தங்கள் வாகனத்தை கைவிட்டுவிட்டனர். பின்னர் ஜபல்பூரில் இருந்து தப்பிச் செல்ல பஸ்சில் ஏறியுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.