தெலங்கானா மாநிலத்தின் யங் இந்தியா ஸ்கில்ஸ் பல்கலைக்கழகத்திற்கு, அதானி அறக்கட்டளை சார்பாக வழங்கவிருந்த ரூ. 100 கோடி நன்கொடையை நிராகரித்துள்ளதாக முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Telangana declines Rs 100 crore from Adani Foundation, CM Revanth cites US indictment, says it is ‘to protect state’s honour and dignity’
சூரிய ஆற்றல் விநியோகம் தொடர்பாக இந்திய அதிகாரிகளுக்கு கௌதம் அதானி லஞ்சம் வழங்கியதாக அமெரிக்கா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதனடிப்படையில், அந்நிறுவன அறக்கட்டளையின் நன்கொடையை நிராகரித்துள்ளதாக முதல்வர் ரேவந்த் ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தெலங்கானா மாநில சிறப்பு தலைமை செயலர் ஜெயேஷ் ரஞ்சன், அதானி அறக்கட்டளையின் தலைவர் பிரிதி அதானிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், "யங் இண்டியா ஸ்கில்ஸ் பல்கலைக்கழகத்துக்கு உங்கள் அறக்கட்டளை மூலம் ரூ.100 கோடி வழங்க நீங்கள் முன்வந்ததற்காக நன்றி. வருமான வரி விலக்கு பெறும் வரை நன்கொடைதாரர்களிடம் இருந்து நன்கொடை பெற வேண்டாம் என்பதற்காக யாரிடம் இருந்தும் இதுவரை நன்கொடை பெறவில்லை. தற்போது வருமான வரி விலக்கு உத்தரவு கிடைத்துள்ளது. எனினும், தற்போதைய சூழல் மற்றும் அதிகரித்து வரும் சர்ச்சை காரணமாக அத்தொகையை அனுப்ப வேண்டாம். முதல்வரின் அறிவுறுத்தலின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதானி மீது அமெரிக்க குற்றச்சாட்டுகளை சுமத்தியதில் இருந்து தெலங்கானா அரசு மற்றும் முதல்வர் ரேவந்த் ரெட்டியை பா.ஜ.க-வினர் கடுமையாக விமர்சித்து வந்தனர். தெலங்கானாவில் அதானி குழுமத்தின் முதலீடுகளால் இந்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
"தெலங்கானாவின் கௌரவம் மற்றும் கண்ணியத்தைக் காப்பாற்றவும், தேவையற்ற சர்ச்சைகளை தடுக்கவும் அதானியின் நன்கொடையை நிராகரித்துள்ளோம். ஒரு ரூபாய் கூட யாரிடமிருந்தும் நாங்கள் பெறவில்லை" என தெலங்கானா முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதே விவகாரம் அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசம் வரை சென்றுள்ளது.
கடந்த வாரம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சட்டப் பேரவையில், குற்றப்பத்திரிகை அறிக்கைகள் மாநில அரசிடம் இருப்பதாகவும், முறைகேடுகள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
ஏற்கனவே, முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூட்டணி கட்சியினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், முந்தைய அரசு ஆந்திராவின் நன்மதிப்பிற்கு காயம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“