Telangana Chief Minister Chandrasekhar Rao slams center's economic package
Telangana Chief Minister Chandrasekhar Rao slams center's economic package : இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதமர் மோடி ரூ. 20 லட்சம் கோடி மதிப்பில் சுயசார்பு பொருளாதார திட்டங்கள் குறித்து அறிவிப்பினை வெளியிட்டார். ஐந்து கட்டங்களாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த திட்டங்களை வெளியிட்டுள்ளார்.
Advertisment
இந்த திட்டங்களில் மாநில அரசுகளின் கடன் பெறும் உச்ச வரம்பு 3%-த்தில் இருந்து 5% வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநில அரசுகள் கூடுதலாக ரூ. 4 லட்சம் கோடி கடன் பெற முடியும். ஆனாலும், மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றும் மாநிலங்களுக்கு கடன் உச்சவரம்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
இந்த திட்டங்கள் குறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் கருத்துகள் வந்த வண்ணம் இருக்கிறது. நேற்று தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ், ஊடங்களுக்கு அளித்த பேட்டியில் மத்திய அரசின் அறிவிப்பு வேடிக்கையாகவும், இந்த திட்டங்கள் மோசடி திட்டங்களாகவும் இருக்கிறது என்று விமர்சனம் செய்துள்ளார். மேலும் மாநில அரசுகளை, மத்திய அரசு பிச்சைக்காரர்கள் போல் நடத்துகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சுயசார்பு பொருளாதார திட்டங்கள் என்பது உண்மையிலேயே மோசடித் திட்டம் தான். வெறும் எண்களை மட்டுமே அறிவித்து துரோகம் செய்கிறது மத்திய அரசு என்று அவர் குற்றம் சாட்டினார். இந்த அறிவிப்புகள் அனைத்தும் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் இல்லை. மாறாக ரூ. 20 லட்சம் கோடியை எட்டுவதற்கு அறிவிக்கப்படும் அறிவிப்புகளாகவே உள்ளது. சர்வதேச பத்திரிக்கைகள் அனைத்தும் மோசமாக இந்த திட்டங்களை விமர்சனம் செய்து வருகின்றன. இது போன்ற திட்டங்களை கூறி, மத்திய அரசு தன் மரியாதையை குறைத்துக் கொள்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். இவர்களின் அரசு நிலப்பிரபுத்துவத்தையும், எதேச்சதிகார மனபோக்கையும் தான் காட்டுகிறது. மாநில அரசுகள் பணம் கேட்டால் பிச்சைக்காரர்கள் போல் நடத்துகிறது மத்திய அரசு என்றும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.
பட்ஜெட் மற்றும் நிதிபொறுப்பில் 2% கூடுதலாகக் கடன் பெற மாநில அரசுகளுக்கு அறிவித்துள்ளது மத்திய அரசு. அதற்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் நகைப்பிற்கு உரியதாக இருக்கிறது. பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் என இதை எப்படி அழைப்பது? மத்திய அரசின் கீழ் மாநில அரசுகள் இல்லை. இந்திய அரசியல் சாசனத்தின் படி தான் இயங்குகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“