தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. அவரது ஆட்சிக்காலம் முடிய இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில், ஆட்சியை கலைத்து விட்டு முன்கூட்டியே சட்டசபை தேர்தலை சந்திக்க சந்திரசேகரராவ் முடிவு செய்தார்.
அதன்படி இன்று, அமைச்சரவையை கூட்டி சட்டசபை கலைக்க முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, ஆளுநர் நரசிம்மனை சந்தித்த சந்திரசேகர ராவ், சட்டசபையை கலைப்பது தொடர்பான பரிந்துரை கடிதத்தை இன்று வழங்கினார்.
இந்த பரிந்துரையை ஏற்ற ஆளுநர் நரசிம்மன், புதிய அரசு அமையும் வரை ஆட்சியை தொடருமாறு சந்திரசேகராவிடம் கேட்டுக்கொண்டார். அவரும் அதை ஏற்றுக்கொண்டார்.
மேலும், தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அவர் இன்று வெளியிட்டார். மொத்தம் உள்ள 119 தொகுதிகளில், 105 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியினருக்கு அடிமையாக இருக்க வேண்டாம் என தெலுங்கானா மக்களுக்கு முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "2014ம் ஆண்டுக்கு முன் தெலங்கானாவில் குண்டு வெடிப்புகள், மின்சார பற்றாக்குறை, சமுதாய மோதல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருந்தன. ஆனால் தற்போது அவை அனைத்தும் தீர்க்கப்பட்டு விட்டன. தேர்தல் களத்தில் மக்களை சந்திக்க வரும் காங்கிரஸ் கட்சியினருக்கு தேர்தலில் மக்கள் தகுந்த பதிலை அளிப்பார்கள்.
நாட்டிலேயே மிக பெரிய கோமாளியாக இருப்பவர் ராகுல் காந்தி. பாராளுமன்றத்தில் பிரதமர் மோடியை கட்டிப்பிடித்த சம்பவமே இதை விளக்குவதாக உள்ளது. காங்கிரஸ் கட்சியினருக்கு அடிமையாக இருக்க வேண்டாம். நாங்கள் சட்டசபை தேர்தலை தனியாகவே சந்திக்க முடிவு செய்துள்ளோம். மஜ்லிஸ் இத்தாஹதுல் முஸ்லிமின் கட்சியுடன் எப்போதும் தோழமையுடன் இருப்போம்.
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 100 சதவீதம் மதசார்பற்ற கட்சி. அப்படி இருக்கையில் பாஜகவுடன் எப்படி நாங்கள் இணைய முடியும்? என கேள்வி எழுப்பினார். ஆக, ராஷ்டிரிய சமிதி கட்சி பாஜகவுடன் கூட்டணி வைக்காது என்பது உறுதியாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.