தெலுங்கானா கவர்னர் தமிழிசை செளந்தரராஜன், தீபாவளி கொண்டாட்டத்தை, மக்கள் சந்திப்பாக மாற்றி பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்ட நிகழ்ச்சி, மக்களிடையே பெரும்வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், மக்கள் பிரதிநிதிகளாகிய பல்வேறு அரசியல் கட்சியினரும் பங்கேற்றனர். இதுமட்டுமல்லாது, விரைவில் ஸ்டிரைக் என அறிவித்துள்ள போக்குவரத்து கழக ஊழியர்களும் இதில் பங்கேற்றிருந்தனர். அவர்களின் கோரிக்கைகள் குறித்து அரசுக்கு தெரிவிப்பதாக அவர்களிடம் தமிழிசை உறுதியளித்தார்.
தெலுங்கானா அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் சந்திப்பை தொடர்ந்து, போக்குவரத்து துறை அமைச்சர் அஜய் குமார், செயலாளர் சுனில் சர்மா உள்ளிட்டோருடன் இந்த விவகாரம் குறித்து தமிழிசை ஆலோசனை நடத்தினார்.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தனது கட்சி எம்.எல்.ஏ.க்களையே அவ்வளவு எளிதில் சந்திப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில், மாஜி கவர்னர் நரசிம்மனின் பாணியிலேயே தற்போதைய கவர்னர் தமிழிசையும் மக்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.