ஹைதராபாத்தில் 27 வயது பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்புனர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த 3 மாவோயிஸ்ட்கள் அல்லாத என்கவுண்ட்டரில் இரண்டு என்கவுண்ட்டர்களுக்கு ஒரே அதிகாரி தலைமை வகித்துள்ளார். யார் அந்த அதிகாரி?
ஹைதராபாத்தில் 27 வயது பெண் கால்நடை மருத்துவரை பாலியல் வன்புனர்வு செய்து கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர்கள் தெலங்கானா போலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகளில் மாவோயிஸ்டுகள் அல்லாத மூன்றாவது என்கவுண்ட்டர் சம்பவம் ஆகும்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வியாழக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை அதிகாலை ஹைதராபாத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள சட்டப்பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் ஒரு அதிகாரி கூறுகையில், காவல்துறையினர் தற்காப்புக்காக அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவித்தார்.
டிசம்பர் 12, 2008 இல் நடந்த முதல் என்கவுண்ட்டரில், இரண்டு சிறுமிகள் மீது ஆசிட் வீசியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை வாரங்கல் போலீசார் சுட்டுக் கொன்றனர். ஹைதராபாத் வன்புனர்வு கொலை வழக்கைக் கையாளும் சைபராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி.சஜ்ஜனார்தான் 2008இல் மேற்கொண்ட என்கவுண்ட்டர் நடவடிக்கைக்கு வாரங்கல் மாவட்ட எஸ்.பி.யாக தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
2008 இல் ஆசிட் வீச்சு தாக்குதலில் நடந்த என்கவுண்ட்டர்
அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஆசிட் வீச்சு தாக்குதல் வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் காவல்துறையைத் தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதால் தற்காப்புக்காக சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த மூவரும் மூவுனூருக்கு அருகிலுள்ள ஒரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கே அவர்கள் சம்பவத்தின் போது பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை மறைத்து வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் வாகனத்தை நெருங்கியவுடன், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மோட்டார் சைக்கிளில் இருந்து ஒரு ரிவால்வரை கத்திகலையும் எடுத்து போலீசார் மீது தாக்குதல் நடத்த முயன்றதாக போலீசார் தெரிவித்தனர்.
2015இல் சிமி அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது என்கவுண்ட்டர்
ஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, ஏப்ரல் 7, 2015 அன்று, சிமி மற்றும் பிற தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய ஐந்து நபர்கள் தெலங்கானா காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஹைதராபாத்திலிருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ள நல்கொண்டா-வாரங்கல் மாவட்டங்களின் எல்லையில் உள்ள பெம்பூர்டிக்கு அருகே, அவர்களை நீதிமன்ற விசாரணைக்காக ஹைதராபாத்திற்கு அழைத்து வரப்பட்டபோது, முன்னாள் போலீஸ் பாதுகாவலரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.