தெலங்கானாவில் 28 வயது பெண் போலீஸ் கான்ஸ்டபிள் திங்கள்கிழமைஅவரது கணவருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போது அவரைத் தாக்கிய அவரது சகோதரரால் வெட்டிக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
ஆங்கிலத்தில் படிக்க: Telangana constable ‘hacked to death by her brother’ while on call with husband in suspected honour killing
இந்தச் சம்பவம் சாதி ஆணவக் கொலையாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். மேலும், அந்த பெண்ணுக்கும் அவரது சகோதரருக்கும் இடையே சொத்து தகராறு இருந்ததாகவும், இந்த கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் புறநகரில் உள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள இப்ராஹிம்பட்டினம் அருகே இந்த சம்பவம் திங்கள்கிழமை காலை நடந்துள்ளது. பெண் போலீஸ் கான்ஸ்டபிள் எஸ். நாகமணி, கடந்த நவம்பர் 21-ம் தேதி, யாதகிரிகுட்டாவில், வேறு சாதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நாகமணியின் குடும்பத்தினர் இந்த உறவை கடுமையாக எதிர்த்தனர் என்றும் அவரது சகோதரர் பரமேஷ் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
“பரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர், மேலும், இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ளவும், தம்பதியினருக்கு எந்த பிரச்னையும் ஏற்படாதவாறு அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது” என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார். இருப்பினும், போலீஸ் ஆலோசனைக்குப் பிறகு பரமேஷ் மிரட்டல் விடுத்ததாக ஸ்ரீகாந்த் குற்றம் சாட்டினார். இந்த வார இறுதியில், ஐதராபாத்தில் வசிக்கும் தம்பதியர், இப்ராஹிம்பட்டினத்தில் உள்ள ஸ்ரீகாந்தின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
திங்கள்கிழமை காலை, ஸ்ரீகாந்த் வேலைக்குச் சென்றார், பின்னர், அவர் நாகமணியும் வேலைக்கு சென்றுவிட்டாரா என்று தெரிந்துகொள்ள போனில் அழைத்துள்ளார். போனில் பேசும்போது, நாகமணி தனது கணவரிடம், தனது சகோதரர் தன்னைத் தாக்குவதாகக் கூறியதையடுத்து, அழைப்பு துண்டிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
நாகமணி ஹயத்நகர் காவல் நிலையத்தில் பணி புரிந்து வைந்தார். “பெண் போலீஸ் கான்ஸ்டபிள் நாகமணி வேலைக்குச் செல்லும் வழியில், ராயப்போலை அடைந்தபோது, காரை ஓட்டி வந்த பரமேஷ், நாகமணியின் ஸ்கூட்டரை பின்னால் துரத்திச் சென்று மோதியதால், அவர் சாலையில் விழுந்தார். அப்போது, நாகமணியை பரமேஷ் கோடரியால் வெட்டிக் கொன்றார்” என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.
பல இடங்களில் கத்திக்குத்து காயம் அடைந்த நாகமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஸ்ரீகாந்த் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் நாகமணி இறந்து கிடந்தார். கொலை நடந்த சில நிமிடங்களில் பரமேஷ் போலீசில் சரணடைந்தார்.
நாகமணிக்கும் அவரது சகோதரருக்கும் பரம்பரை சொத்து தொடர்பாக தகராறு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். “சுமார் 15 நாட்களுக்கு முன்பு, அவர் ராயபோலு கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவரை மணந்தார். அவர்கள் வசிக்கும் ஹயத்நகரில் இருந்து விடுமுறைக்காக இங்கு வந்திருந்தனர். காலையில், நாகமணி பணிக்கு சென்று கொண்டிருந்தபோது, வேகமாக வந்த கார் அவருடைய ஸ்கூட்டருக்குப் பின்னால் மோதியது, அதன் பிறகு, கார் ஓட்டி வந்தவர் அவரை அரிவாளால் வெட்டிக் கொன்றார். அண்ணன் மீது சந்தேகம் இருப்பதாகவும், குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயமாக தெரிகிறது. அவரது சகோதரர் கைது செய்யப்பட்ட பிறகு அடுத்தகட்ட விசாரணை தொடரும்” என்று இப்ராஹிம்பட்டினம் காவல் ஆய்வாளர் பொல்லம் சத்தியநாராயணா தெரிவித்தார்.
டி.சி.பி மகேஸ்வரம் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், போலீசார் இன்னும் விவரங்களை சரிபார்த்து வருகின்றனர். “இறந்த பெண்ணின் பெற்றோர் இப்போது இல்லை, அவருக்கு உடன்பிறப்புகள் மட்டுமே உள்ளனர். திருமணம் செய்துகொண்ட நபரால் எந்த ஆவண ஆதாரத்தையும் வழங்க முடியவில்லை. அவர்கள் சட்டப்படி திருமணம் செய்து கொண்டார்களா என்பது எங்களுக்குத் தெரியாது. இரண்டு விதமாகக் கூறுகின்றனர். ஒன்று ஆணவக் கொலை என்றும் இன்னொன்று சொத்து தகராறு என்றும் கூறுகின்றனர். விரைவில் தெளிவு கிடைக்கும்” என்று டி சுனிதா ரெட்டி கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.