பா.ஜ.க-வுடனான கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறுவதாக அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி, 2018-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கும் அனைத்து அமசங்களிலும் தெலுங்கு தேசம் நிராகரிக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆந்திர மாநிலத்தின் நீண்டநாள் கோரிக்கையான தலைநகர் அமராவதிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குதல் மற்றும் போலவரம் அணைக்கட்டு, விசாகப்பட்டினம், விஜயவாடா உள்ளிட்ட நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் குறித்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறாமல் போனதால், தெலுங்கு தேசம், மத்திய பட்ஜெட் மீது கடும் அதிருப்தி தெரிவித்தது.
இதனையடுத்து, பாஜக உடனான கூட்டணியில் இருந்து தெலுங்கு தேச கட்சி வெளியேறுவது குறித்து, அக்கட்சியில் தலைவர், சந்திரபாபு நாயுடு ஆலோசனை கூட்டம் நடத்தினார். கடந்த மாதம் 4 ஆம் தேதி நடைப்பெற்ற இந்த கூட்டத்தில், தெலுங்கு தேசம் கட்சி எம்.பிக்கள், மூத்த நிர்வாகிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இந்த கூட்டத்தில், பாஜக உடனான கூட்டணியில் முறிவு இல்லை என்று முடிவெடுக்கப்பட்டது. சிறப்பு நிதி பெற மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார். இந்நிலையில், மத்திய அமைச்சர்களாக உள்ள தனது கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களை சந்திரபாபு நாயுடு பதவி விலக கூறியுள்ளதாக த்ககவல் வெளியாகியுள்ளது. ஒய்.எஸ்.சவுத்திரி மற்றும் கஜபதி ராஜு ஆகிய இருவரும் தங்களது பதவிகளை நாளை ராஜினாமா செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க-வுடனான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகும் வகையில் சந்திரபாபு நாயுடு இத்தகைய முடிவினை எடுத்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், நேற்றையை தினம் தனது அமைச்சர்கலுடன் போனில் பேசிய சந்திரபாபு நாயுடு, “ உங்கள் மனதிலும், மக்களின் மனதிலும் என்ன இருக்கிறது என்பது எனக்கு தெரியும். நமது கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றும் வரையில் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்துங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன். சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்கிறேன். அதுவரை போராட்டத்ைத தொடருங்கள்” என்று கூறியுள்ளார்.
அதே போல், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை, ஆந்திர மாநில நிதியமைச்சர் யனமல ராமகிருஷ்ணா டெல்லியில் சந்தித்து பேசினார் இரண்டு நாட்களாக டெல்லியில் முகாமிட்டு அவரை சந்தித்து பேசியும் எந்த பயனும் கிடைக்காமல் வெறும் கையுடன் அவர் ஆந்திரா திரும்பினார். இதுப்போன்ற பல்வேறு காரணங்களை முன்வைத்து, தெலுங்கு தேசம் கட்சி பாஜஜ உடனான கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தகவல் பரவி வருகின்றன. இது ஆந்திரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.