ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சிம்ஹாச்சலம் கோவிலில் புதிதாக கட்டப்பட்ட சுவர் ஏப்ரல் 29 அதிகாலை இடிந்து விழுந்ததில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்த நிலையில் ஆறு பேர் காயமடைந்தனர். மாநிலத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து இந்த இடிபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதிகாலை 4 மணி முதல் அட்சய திருதியை முன்னிட்டு கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உள்துறை அமைச்சர் அனிதா கூறுகையில், அதிக எண்ணிக்கையிலான மக்கள் இருந்த டிக்கெட் கவுண்டரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் அதிகப்படியான மக்கள் சாய்ந்ததால் சுவர் இடிந்து விழுந்தது.
பலர் சுவர் இடிந்து விழுவதை உணர்ந்து பின்வாங்கியதால் அதிக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சுவர் சில வாரங்களுக்கு முன்பு சிறப்பு நுழைவு படிக்கட்டுக்கு அருகில் கட்டப்பட்டது. முதலமைச்சர் என் சந்திரபாபு நாயுடு இந்த சம்பவத்திற்கு அதிர்ச்சி தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 3 லட்சமும் நிவாரணம் அறிவித்தார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்.
தொலைபேசி மூலம் நிலைமையை ஆய்வு செய்த நாயுடு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் வேலை வழங்கப்படும் என்றார். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். முன்னாள் முதலமைச்சரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி இந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த அதிர்ச்சி தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்த சம்பவம் குறித்து "ஆழ்ந்த வருத்தம்" அடைவதாகக் கூறிய அவர், காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். "கடவுளின் தெய்வீக வடிவத்தைக் காண வந்த பக்தர்கள் இப்படி ஒரு சோகமான முறையில் உயிரிழந்தது மிகவும் வேதனையளிக்கிறது" என்று அவர் கூறினார். மேலும், அவர் பின்னர் சம்பவ இடத்திற்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.