Advertisment

3 இலாகாக்களை குறிவைக்கும் நிதிஷ் குமார்; ஐக்கிய ஐனதா தளத்தில் யாருக்கு வாய்ப்பு?

மோடி அமைச்சரவையில் 3 முக்கிய இலாகாக்கள் மீது நிதிஷ் குமார் கட்சிக்கு கண்; ஐக்கிய ஜனதா தள எம்.பி.,க்களில் ரேஸில் முன்னிலையில் இருப்பது யார்?

author-image
WebDesk
New Update
modi nitish chandrababu

டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் (பி.டி.ஐ)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Santosh Singh

Advertisment

தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சிக்கு அடுத்தபடியாக, நிதிஷ் குமாரின் ஜே.டி.(யு) தான் வென்றுள்ள 12 இடங்களைப் பயன்படுத்தி, இரயில்வே அமைச்சகம் உட்பட அமைச்சரவையில் முக்கிய இலாகாக்களை கேட்டுப்பெற திட்டமிட்டுள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க:

ஆர்.ஜே.டி (RJD) கட்சியின் தேஜஸ்வி யாதவுடன் விமானத்தை பகிர்ந்து கொண்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, வியாழன் அன்று தேசிய தலைநகர் டெல்லியில் என்.டி.ஏ (NDA) கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் நிதிஷ் குமார் கலந்து கொண்டார். "இரு தலைவர்களும் ஒரே விமானத்தில் டெல்லிக்கு பயணம் செய்தது ஒரு தற்செயல் நிகழ்வு" என்று ஜே.டி(யு) செய்தித் தொடர்பாளரும் எம்.எல்.சி.,யுமான நீரஜ் குமார் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார். "நாங்கள் என்.டி.ஏ உடன் வலுவாக இருக்கிறோம் மற்றும் மூன்றாவது முறையாக நரேந்திர மோடியின் கீழ் ஒரு அரசாங்கத்தை எதிர்நோக்குகிறோம்," என்றும் நீரஜ் குமார் தெரிவித்தார்.

இந்த ஆதரவுக்கு, நல்ல பலன் கிடைக்கும் என்று வட்டாரங்கள் கூறுகின்றன. 2019 இல், ஜே.டி(யு )16 இடங்களை வென்றது, ஆனால் பா.ஜ.க தனித்து பெரும்பான்மையாக இருந்ததால், ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது, அதேநேரம் இந்த முறை ஜே.டி(யு) வென்றுள்ள 12 இடங்கள் மிகவும் மதிப்புமிக்கவை என்று கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர்.

ரயில்வே, ஊரக வளர்ச்சி மற்றும் ஜல் சக்தி அமைச்சகங்கள் மீது கட்சி தனது கண்களை வைத்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. மற்ற விருப்பங்கள் போக்குவரத்து மற்றும் விவசாயம். “என்.டி.ஏ அரசில் ரயில்வே, விவசாயம் மற்றும் போக்குவரத்து துறைகளை நிதிஷ் குமார் வகித்துள்ளார். மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவும் துறைகளை எங்கள் எம்.பி.க்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். பீகார் நீர் நெருக்கடியை எதிர்கொள்ளும் சூழலில், நீர்மட்டம் குறைதல் மற்றும் வெள்ளம் போன்ற சவால்கள் இருக்கும் நிலையில், ஜல் சக்தி முக்கியமானது. நதி நீர் இணைப்பு திட்டங்களுக்கு நாங்கள் உந்துதலைக் கொடுக்க முடியும்,” என்று ஒரு ஜே.டி(யு) தலைவர் கூறினார்.

கிராமப்புற வளர்ச்சி அமைச்சகம், கிராமப்புற உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தை உயர்த்த உதவும் என்று அந்த தலைவர் நியாயப்படுத்தினார். "மேலும் ரயில்வேயைப் பெறுவது நிச்சயமாக பீகாருக்கு பெருமை சேர்க்கும் விஷயம்" என்றும் அவர் கூறினார்.

இதுமட்டுமல்ல, அடுத்த ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தலில் என்.டி.ஏ போட்டியிடும் போது நிதிஷ் குமார் தலைமையில் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதும் எங்கள் விருப்பம் என்று கட்சித் தலைவர்கள் கூறுகிறார்கள். எதிர்காலத்தில் தலைமை மாற்றத்தை அரசு காணக்கூடும் என்ற ஊகத்தையும் அவர்கள் நிராகரித்தனர்.

சாத்தியமான அமைச்சர் பதவிகளுக்கான முன்னணியில் உள்ளவர்களில் ஜே.டி(யு) கட்சியின் அரை டஜன் மக்களவை மற்றும் ராஜ்யசபா எம்.பி.க்கள் உள்ளனர். "உயர் சாதி, ஓ.பி.சி குஷ்வாஹா மற்றும் ஈ.பி.சி (EBC) தலைவர்களுக்கு" இடமளிப்பதில் கட்சி சமநிலையைக் கண்டறிய வேண்டும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

அமைச்சர் பதவிக்கான போட்டியில் உள்ளவர்களில் முன்னாள் ஜே.டி(யு) தேசியத் தலைவரும் முங்கர் பாராளுமன்ற உறுப்பினருமான லாலன் சிங் ஒரு "உயர் சாதிக் கனவான்"; ஜஞ்சர்பூர் பாராளுமன்ற உறுப்பினர் ராம்ப்ரீத் மண்டல், ஒரு ஈ.பி.சி தலைவர்; மற்றும் குஷ்வாஹா சமூகத்தைச் சேர்ந்த வால்மீகி நகர் எம்.பி சுனில் குமார். சீதாமர்ஹி எம்.பி தேவேஷ் சந்திர தாக்கூர் மற்றும் ராஜ்யசபா எம்.பி சஞ்சய் குமார் ஜா ஆகியோரும் போட்டியில் உள்ளனர், ஆனால் லாலன் சிங் நிதிஷ் குமாருடனான நீண்டகால உறவின் காரணமாக முன்னணியில் இருக்கக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Bihar Pm Modi Nitish Kumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment