தகுதி வாய்ந்த யார் வேண்டுமானாலும் இந்தியாவின் எந்த மாநிலத்தையும் ஆளலாம் என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். மேலும், கர்நாடகாவை கன்னடர்களே ஆள வேண்டும் என தான் கூறவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து, தன் ட்விட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “தகுதி வாய்ந்த யார் வேண்டுமானாலும் இந்தியாவின் எந்த மாநிலத்தையும் ஆளலாம் என்பதே என்னுடைய உறுதியான நிலைப்பாடு. பெங்களூரு பத்திரிக்கையாளர் மன்றத்தில் நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.
கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாம், தெலங்கானா என எந்த மாநிலமாக இருந்தாலும் வகுப்புவாத அரசியல்வாதிகளை ஆள விடமாட்டோம். வரும் தேர்தல்களில் கீழ்த்தரமான, வகுப்புவாத, பிரித்தாளும் அரசியலை செய்யவிட மாட்டோம்.
என்னுடைய கருத்தை திரித்து வகுப்புவாத அரசியல்வாதிகள் என் மீது வெறுப்பை விதைப்பது , அவர்களின் பயம் மற்றும் விரக்தியையே காட்டுகிறது.", என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கர்நாடகாவை கன்னடர்களே ஆள வேண்டும் என, நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியதாக செய்திகள் வெளியாகின.