ஜார்க்கண்ட் மாநிலத்தில் 99 வயது முதியவர் ஒருவர் தினந்தோறும் ஒரு கிலோகிராம் களிமண்ணை உண்ணும் வழக்கத்தை கொண்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த 99 வயது முதியவர் கரு பஸ்வான். தான் 1919-ஆம் ஆண்டு பிறந்ததாக கரு பஸ்வான் கூறுகிறார். இவருக்கு 11 வயதாக இருக்கும்போதே களிமண்ணை சாப்பிடும் பழக்கம் வந்துவிட்டதாக தெரிவிக்கிறார் கரு பஸ்வான். தன் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்ததால், தினமும் உணவு கிடைக்காத நிலைமையில், தான் களிமண்ணை சாப்பிட ஆரம்பித்ததாக கூறும் கரு பஸ்வான், ஆரோக்கியமான உடல் நலத்துடனேயே உள்ளார்.
இதுகுறித்து, ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “என்னுடைய நிதி நிலைமையால் நான் மிகவும் விரக்தி அடைந்திருந்தேன். நான் 10 குழந்தைகளுக்கு உணவளிக்க வேண்டும். நான் இறந்துவிடலாம் என்று நினைத்துதான் களிமண்ணை சாப்பிட ஆரம்பித்தேன். ஆனால், அதன்பிறகு களிமண்ணுக்கு அடிமையாகிவிட்டேன். இப்போது, களிமண்ணை உண்பதிலிருந்து விலக முடிவதில்லை”, என கூறினார்.
களிமண்ணை உண்பதிலிருந்து கரு பஸ்வானை அவரது குடும்பத்தினர் தடுத்து நிறுத்த முயன்றிருக்கின்றனர். ஆனால், களிமண் இல்லாமல் உயிர்வாழவே முடியாது என்ற நிலைமைக்கு கரு பஸ்வான் ஆளாகியிருக்கிறார்.
எந்தவொரு சத்தும் இல்லாமல் ஒன்றை உண்பதற்கு அடிமையாகும் இத்தகைய நிலைமைக்கு ’பிக்கா’ குறைபாடு என்றழைக்கப்படுகிறது.