டெல்லியில் வீட்டில் பணிபுரிந்துவந்த 14 வயது சிறுமியை துன்புறுத்தி சித்ரவதை செய்துவந்ததாக பல் மருத்துவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
வடமேற்கு டெல்லியின் மாடல் டவுன் பகுதியை சேர்ந்தவர் பல் மருத்துவர் நிதி சௌத்ரி. இவரது வீட்டில் 14 வயது சிறுமி பணிபுரிந்து வந்தார். அச்சிறுமி ஜார்க்கண்டில் உள்ள இடைத்தரகர் மூலம் வீட்டு வேலைக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், அச்சிறுமியை பல் மருத்துவர் தொடர்ந்து உடல் ரீதியாக சித்ரவதை செய்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பல் மருத்துவரின் வீட்டுக்கு அருகிலுள்ள ஒருவர் இதுகுறித்து டெல்லி பெண்கள் நல ஆணையத்திடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து, அச்சிறுமியை அதிகாரிகள் மீட்டு, குற்றம்சாட்டப்பட்ட பல் மருத்துவரை கைது செய்தனர். தற்போது அச்சிறுமி பெண்கள் நல ஆணையத்தின் கண்காணிப்பில் உள்ளார். மேலும், ஜார்க்கண்டில் உள்ள அச்சிறுமியின் பெற்றோரை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது.
சிறுமியை மீட்டபின் பெண்கள் நல ஆணைய அதிகாரிகள் தெரிவித்ததாவது, பல் மருத்துவர் அச்சிறுமியை அடித்தும், கடித்தும், தீக்காயம் ஏற்படுத்தியும் துன்புறுத்தி வந்தார். மேலும், உணவு கூட வழங்காமல் அச்சிறுமி கொடுமைக்கு ஆளாகியுள்ளார். அச்சிறுமியின் உடலில் தீக்காயங்கள் உள்ளன. தொடர்ந்து அயர்னிங் இயந்திரத்தால் சூடு வைத்தும், சுடு தண்ணீரை ஊற்றியும் அச்சிறுமையை துன்புறுத்தியுள்ளார்.