scorecardresearch

கோவிட் பரோலில் இருந்த 3,468 கைதிகளை காணவில்லை; தேடுதலில் திஹார் ஜெயில்!

பரோல் காலம் முடிந்தும், சிறை திரும்பாதப்வர்களை தேடி ஒப்படைக்குமாறு டெல்லி காவல்துறையை திஹார் நிர்வாகம் அணுகி உள்ளது.

கோவிட் பரோலில் இருந்த 3,468 கைதிகளை காணவில்லை; தேடுதலில் திஹார் ஜெயில்!

India News in Tamil : இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று உச்ச நிலையில் இருந்த போது, சிறைக் கைதிகள் குறித்தான அச்சம் எழுந்த நிலையில், அவர்களை பரோலில் விடுவிக்க மத்திய அரசு முடிவெடுத்தது. ஆசியாவின் மிகப் பெரிய சிறை வளாகங்களில் ஒன்றான திஹார் ஜெயிலில், கைதிகளை விடுவிக்க முடிவெடுக்கப்பட்டது.

திஹார் ஜெயிலில் இருந்து 6,740 கைதிகள் கொரோனா பரோலில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், பரோல் காலம் முடிவடைந்த நிலையில், விடுவிக்கப்பட்ட கைதிகளில் 3272 பேர் சிறைக்கு திரும்பிய நிலையில், எஞ்சிய 3468 பேரை காணவில்லை என திஹார் சிறை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. பரோல் காலம் முடிந்தும், சிறை திரும்பாதப்வர்களை தேடி ஒப்படைக்குமாறு டெல்லி காவல்துறையை திஹார் நிர்வாகம் அணுகி உள்ளது.

எச்.ஐ.வி, புற்றுநோய், டயாலிசிஸ் தேவைப்படும் சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள், ஹெபடைடிஸ் ஈ, சி, ஆஸ்துமா, காசநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான கைதிகள் கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்டனர். மேலும், டெல்லியின் மண்டோலி, ரோஹினி பகுதிகளில் உள்ள சிறைகளில் இருந்து, 1,184 கைதிகள் பரோலில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் கடந்த பிப்ரவரி 7 முதல் மார்ச் 6-ம் தேதிக்குள் சிறைக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், 1072 பேர் சிறை திரும்பிய நிலையில், 112 பேரை காணவில்லை. சிறைக்கு திரும்பாத கைதிகளின் குடும்பங்களை காவல்துறையினர் அணுகிய போது, அவர்கள் அங்கு வரவில்லை என கூறுவதாக சிறைத்துறை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையைத் தொடர்ந்து, தண்டனை பெற்ற குற்றவாளிகள் மற்றும் சிறைக் கைதிகளை சிறைச்சாலைகளிலிருந்து விடுவிப்பதற்கான நிபந்தனைகளை வகுக்க அனைத்து மாநிலங்களும் குழுக்களை அமைத்தன. இதைத் தொடர்ந்து, பல மாநிலங்களிலும் கைதிகள் 30 முதல் 60 நாட்களுக்கு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். டெல்லியைப் பொறுத்தவரையில், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி நீதிபதி ஹிமா கோஹ்லி தலைமையிலான குழு, கைதிகளை விடுவிக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

காணாமல் போன கைதிகள் குறித்து திஹார் சிறைத்துறை காவல் அதிகாரியான டி.ஜி.கோயல், ‘விசாரணைக் கைதிகளில் சரணடையாத கைதிகள் குறித்த தகவல்களை தில்லி காவல்துறையிடம் பகிர்ந்துள்ளோம். சில கைதிகள் இன்னும் சரணடைந்து வருகின்றனர். மேலும் சிலர் நீதிமன்றங்களிலிருந்து வழக்கமாக பெறப்படும் ஜாமீன்களைப் பெற்றிருந்தால் அந்த தகவலகளும் விரைவில் உறுதி செய்யப்படும்’, என்றார்.

தற்போது திகாரில் சுமார் 20,000 கைதிகள் உள்ளனர். இதுவரையில், 174 சிறைக் கைதிகள் மற்றும் 300 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில், கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, கடந்த வாரம், திகார் சிறை நிர்வாகம் கைதிகளை, அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சந்திக்க மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்ய உத்ததவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Tihar looks for 3468 inmates gone missing while on covid parole tamil news