திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.85,705 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள் உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலையில் நேற்று திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி தலைமையில் அறங்காவலர் குழுக்கூட்டம் நடந்தது. இதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படியுங்கள்: ரூ120 கோடி வங்கி டெபாசிட்; பிரதமர் பேரணியில் தாக்குதல் நடத்த சதி: பி.எஃப்.ஐ ரெய்டு பற்றி இ.டி தகவல்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஒய்.வி.சுப்பாரெட்டி, சாமானிய பக்தர்களைக் கருத்தில் கொண்டு பல தீர்மானங்கள் ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, பிரம்மோற்சவ விழா மற்றும் புரட்டாசி மாதம் முடிந்த பிறகு, அதிகாலை நடைபெற்று வரும் வி.ஐ.பி பிரேக் தரிசனத்தை சோதனை அடிப்படையில் தினமும் காலை 10 மணி முதல் 12 மணி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால், இரவில் காத்திருப்பு அறைகளில் காத்திருக்கும் சாமானிய பக்தர்கள் காலை முதலே சுவாமியை தரிசித்து ஊர் திரும்ப வசதியாக இருக்கும்.
இதேபோல சர்வ தரிசன டோக்கன் முறையும் புரட்டாசி மாதம் முடிந்த பிறகு வழங்கப்படும். தினமும் 20 ஆயிரம் டோக்கன்கள் வீதம் திருப்பதியில் சர்வ தரிசன டோக்கன்களை பெற்றுக்கொண்டு, அருகில் உள்ள கோயில்களில் தரிசனம் செய்து விட்டு, அதன்பின், திருமலைக்கு வந்து ஏழுமலையானையும் தரிசித்து விட்டு ஊர் திரும்பலாம். அதே சமயம், டோக்கன்கள் ஏதும் இன்றி நேரடியாக திருமலைக்கு வந்து சர்வ தரிசனம் மூலம் பக்தர்கள் சுவாமியை தரிசிக்கலாம்.
அடுத்தப்படியாக, புரட்டாசி மாதத்துக்குப் பிறகு, திருமலையில் தங்கும் அறைகளுக்காக டிக்கெட் அல்லது டோக்கன்கள் திருப்பதியிலேயே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமலையில் தங்கும் அறைகளுக்கு பக்தர்கள் திருப்பதியிலேயே டோக்கன் பெற்றுக் கொள்ளலாம். ஒருவேளை கிடைக்காவிட்டால், திருப்பதியில் உள்ள தேவஸ்தான விடுதிகள் அல்லது தனியார் லாட்ஜ்களில் தங்கலாம். இதனால் திருமலைக்கு வந்து அறை கிடைக்காமல் அவதிப்பட வேண்டியதில்லை.
ஏழுமலையானின் சொத்து மதிப்பை தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஆன்லைனில் வெளியிட்டு வருகிறோம். அதன்படி, திருப்பதி ஏழுமலையானுக்கு நாடு முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நிலம், வீட்டு மனை போன்ற அசையா சொத்துகள் உள்ளன. அதன்படி சுவாமிக்கு மொத்தம் 960 அசையா சொத்துகள் உள்ளன. மொத்தம் 7,123 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த அசையா சொத்துகளின் இன்றைய மதிப்பு ரூ.85,705 கோடியாகும்.
மேலும், பல்வேறு வங்கிகளில் 14,000 கோடிக்கும் அதிகமான நிலையான வைப்புத்தொகைகளையும், கிட்டத்தட்ட 14 டன் தங்க இருப்புக்களையும் கொண்டுள்ளது.
தேவஸ்தான ஊழியர்களுக்கு ஏற்கனவே 300 ஏக்கரில் வீட்டுமனைகள் ரூ.60 கோடி மதிப்பில் வாங்கப்பட்டுள்ளன. தற்போது திருப்பதி தனி மாவட்டமானதால், கூடுதலாக 132 ஏக்கர் நிலம் வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.25 கோடியாகும். விரைவில் தேவஸ்தான ஊழியர்களுக்கு வீட்டு மனைகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil