திருப்பதி கோவிலுக்குள் 6 நாட்களுக்கு பக்தர்களுக்கு உள்ளே அனுமதி இல்லை என்ற அறிவிப்பை திருப்பதி தேவஸ்தானம் திரும்ப பெற்றுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் 6 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்ற தேவஸ்தானம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. அதாவது திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை அடுத்து கோவிலை சுத்தம் செய்ய வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரையிலான ஆறு நாட்களுக்கு கோவில் முற்றிலும் மூடப்படும் என்றும் அந்த ஆறு நாட்களுக்கு பக்தர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறப்பட்டது.
திருப்பதி தேவஸ்தானத்தின் இந்த திடீர் அறிவிப்பு பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தேவஸ்தானத்தின் இந்த அறிவிப்புக்கு ஆந்திர மாநில அரசியல் கட்சிகளும், பக்தர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில்,திருப்பதி திருமலை தேவஸ்தானம் அந்த முடிவை திரும்ப பெற்றுள்ளது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த முடிவை எடுத்துள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. எனவே கோவில் சுத்தம் செய்யப்படும் நாட்களில் பக்தர்கள் சிறுசிறு குழுவாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவஸ்தானம் கோவிலுக்குள்6 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிப்பு வெளியிட்ட போது நடிகை ரோஜா, கோவிலில் உள்ள புதையலை எடுக்க முயற்சியா? என்ற சந்தேகத்தை கிளப்பி பரபரப்பை ஏற்படுத்தினார்.