/tamil-ie/media/media_files/uploads/2019/01/irctc-tirupati-tourism-4.jpg)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், திருப்பதியில் போலி ஆதார் அட்டை பயன்படுத்தி 20 முறை சாமி தரிசனம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பெங்களூருவைச் சேர்ந்த ஸ்ரீதர் என்ற நபர் நேற்று அதிகாலை 3 மணியளவில் சுப்ரபாத சேவையில் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அவர் கொண்டு வந்த ஆதார் அட்டை மற்றும் சுப்ரபாத சேவை டிக்கெட்டை தேவஸ்தான அதிகாரிகள் வாங்கி சோதனை செய்தனர். ஆதார் அட்டையில் உள்ள முகமும், ஸ்ரீதரின் முகமும் ஒத்துப்போகவில்லை என்று தெரிகிறது.
இதனால், சந்தேகம் அடைந்த திருமலை-திருப்பதி தேவஸ்தான பறக்கும் படை அதிகாரிகள் ஸ்ரீதரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர், போலி ஆதார் அட்டையைப் பயன்படுத்தி குலுக்கல் முறை சேவையான சுப்ரபாத சேவை டிக்கெட்டை பெற 400 முன்பதிவுகள் செய்திருப்பதும் அதில் 20 முறை டிக்கெட்டுகளை வாங்கி சாமி தரிசனம் செய்திருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள், ஸ்ரீதரை திருமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் ஸ்ரீதர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.