திருப்பதி லட்டுகளை, கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க திருப்பதி தேவஸ்தானம் அதிரடி நடவடிக்கைகளை செயல்படுத்த உள்ளது.
திருப்பதி தேவஸ்தான உறுப்பினர்களின் கூட்டம், தலைவர் ஒய்.வி.சுப்பாராவ் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 12) தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கள்ள சந்தையில் திருப்பதி லட்டுகளின் விற்பனையை தடுக்கும் பொருட்டு, லட்டுகளின் விலையை, அனைத்து இடங்களிலும் ஒரே அளவில் நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இதில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.
திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் ஒரு லட்டு 5 ரூபாய் வீதம் 10 லட்டுகள் வாங்கிக்கொள்வதற்கான கூப்பன்கள் மாதந்தோறும் வழங்கப்படுகிறது. அதேபோல், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஒரு லட்டு 10 ரூபாய் வீதம் 10 லட்டுகள் வாங்கிக்கொள்வதற்கான கூப்பன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஊழியர்கள் தங்களுக்கு கிடைக்கும் சலுகை விலை லட்டுகளை கள்ளச்சந்தையில் ரூ.5 முதல் ரூ.50 வரைக்கு விற்பனை செய்கின்றனர். இதன்மூலம், கோயில் நிர்வாகத்திற்கு பேரிழப்பு ஏற்படுகிறது.
வெங்கடாஜலபதி தரிசனத்தை முடித்துவிட்டு வரும் பக்தர்களுக்கு ரூ.25க்கு 2 லட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. பின் வெளியில் உள்ள கவுண்டர்களில் 5 லட்டுகள் ரூ.70 என்ற மதிப்பிலும், கீழ் திருப்பதியில் 4 லட்டுகள் ரூ.70 மதிப்பிற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
திருப்பதி லட்டு, சுத்தமான நெய்யினால் செய்யப்பட்டு வருகின்றன. ஒரு லட்டு தயாரிக்கவே ரூ.40 செலவு பிடிக்கிறது. தேவஸ்தானம் சார்பில் மானிய விலைக்கே லட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சலுகையின் மூலம் லட்டு பெறுவோர், அதனை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதன் மூலம், தேவஸ்தானத்துக்கு அதிகளவில் நிதிஇழப்பு ஏற்பட்டு வருகிறது. இது உடனடியாக தடுக்கப்பட வேண்டும்.
இதன்காரணமாக, அனைத்து இடங்களிலும், ஒரே விலையில் லட்டுகளை விற்பனை செய்ய தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
வார நாட்களில் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லட்டுக்களும், வார இறுதி மற்றும் பண்டிகை நாட்களில் நாள் ஒன்றுக்கு 3 லட்சம் லட்டுகள் தேவஸ்தானத்தில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
திருப்பதி லட்டுக்கு, கடந்த செப்டம்பர் மாதம் புவிசார் குறியீடு வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.