டில்லி போலிஸ் - வக்கீல்கள் மோதல் விவகாரத்தின் போது டில்லி வடக்கு போலீஸ் துணை கமிஷனர் மோனிகா உள்ளிட்ட போலீசாரை, வக்கீல்கள் துரத்தும் புதிய வீடியோ வெளியாகியுள்ளது.
தலைநகர் டில்லியில் உள்ள திஸ் ஹசாரி மற்றும் சாகேத் கோர்ட் வளாகங்களில், வாகனங்களை நிறுத்தும் விவகாரத்தில், கோர்ட் வளாகத்தில் போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. இந்த சம்பவம், டில்லி மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் தாக்கிக்கொண்ட பல வீடியோக்கள், அவ்வப்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
திஸ் ஹசாரி கோர்ட் பகுதியில், டில்லி வடக்கு போலீஸ் துணை கமிஷனர் மோனிகா உள்ளிட்ட போலீசாரை, ஒரு பிரிவு வக்கீல்கள் துரத்தும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
போலீஸ் - வக்கீல்கள் மோதல் விவகாரத்தில், தங்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்று டில்லி போலீஸ் தலைமையகத்தில் நவம்பர் 2ம் தேதி போலீசார் திடீர் போராட்டம் மேற்கொண்டனர். 10 மணிநேரங்களுக்கும் மேலாக இந்த போராட்டம் நீடித்தது.
இந்த போராட்டம், இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று கூறி, ராகேஷ் குமார் லக்ரா என்ற வக்கீல், டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பிப்ரவரியில் விசாரணை : இந்த வழக்கு, பிப்ரவரியில் டில்லி உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.