தேர்தல் பத்திரங்கள் மூலம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி (டி.எம்.சி) ரூ.1,610 கோடி நன்கொடை பெற்றதாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ) தரவுகளை வெளியிட்டது. இந்நிலையில், கட்சிக்கு நன்கொடை வழங்கியவர்களின் விவரங்கள் தெரியாது, நன்கொடைக்காக கொல்கத்தாவில் உள்ள தங்களது கட்சி அலுவலகத்தில் "டிராப் பாக்ஸ்" வைத்திருப்பதால் விவரங்கள் தெரியாது என ஆளும் கட்சி சனிக்கிழமை கூறியது.
தரவுகளின்படி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான டி.எம்.சி, ஏப்ரல் 12, 2019 முதல் ஜனவரி 24, 2024 வரை 211 நன்கொடையாளர்களிடமிருந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.1,610 கோடியைப் பெற்றுள்ளது.
கொல்கத்தாவில் சனிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசிய டி.எம்.சி தலைவர் குணால் கோஷ், “திரிணாமுல் (டிஎம்சி) கட்சிக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்பது தெரியாது. ஒருவர் தேர்தல் பத்திரம் வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். அதை அவர் ஒரு அரசியல் கட்சிக்கு வழங்க 10 நாட்கள் அவகாசம் உள்ளது. டி.எம்.சி அலுவலகம் முன்பு டிராப் பாக்ஸ் வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பெட்டியில் யார் வேண்டுமானாலும் பணத்தைப் போடலாம் என்று கூறினார்.
நன்கொடை வழங்கியவர்கள் யார் என்பதை அறிய வழியில்ல என்று மேலும் கூறினார். பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தின்படி, தேர்தல் பத்திரத்திற்கு பெயர்கள் இல்லை, ஆல்பா எண் குறியீடு மட்டுமே இருக்கும். எந்த நிறுவனம் அதை வாங்கியது அல்லது நன்கொடை அளித்தவர் யார் என்பது எங்கும் (பத்திரத்தில்) குறிப்பிடப்படவில்லை.
இந்த முறையை பா.ஜ.க, நாட்டில் அறிமுகப்படுத்தியது. அவர்களுக்கு யார் பணம் கொடுத்தது என்பது தெரியும். அவர்களிடம் சிபிஐ, இடி மற்றும் வருமான வரித் துறைகள் உள்ளன, மேலும் இந்த ஏஜென்சிகளைப் பயன்படுத்தி பணத்தைக் குவித்தனர், ஆனால் டிஎம்சிக்கு இ.டியோ அல்லது சி.பி.ஐ-யோ இல்லை என்று கூறினார்.
கோஷின் கருத்துகள் மாநிலத்தில் அரசியல் சர்ச்சையை கிளப்பியது, எதிர்க்கட்சிகள் டி.எம்.சி-ஐ தாக்கின. பாஜக தலைவர் ராகுல் சின்ஹா கூறுகையில், “தனது ஊழலை வெளியிடும் போது திரிணாமுல் காங்கிரஸ் செய்வதறியாது உள்ளது, இப்போது இதுபோன்ற விசித்திரமான வாதங்களை முன்வைக்கிறது”. என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைவர் சுஜன் சக்ரவர்த்தி கூறுகையில், “பொது பணத்தை கொள்ளையடிக்க கார்ப்பரேட் நிறுவனங்களை டி.எம்.சி பயன்படுத்தியது தெளிவாகிறது. மின்சாரக் கட்டணத்தை உயர்த்த CESC-க்கு சுதந்திரம் அளித்து, லாபத்தில் தங்கள் பங்கை தேர்தல் பத்திரங்கள் மூலம் செலுத்தச் சொன்னார்கள். மேலும், லாட்டரி நிறுவனங்களுக்கு ஃப்ரீஹேண்ட் கொடுத்து, அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்றது சுமார், 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும் என்றார்.
"இப்போது, உண்மை வெளிச்சத்திற்கு வந்த பிறகு, அவர்கள் இத்தகைய நொண்டி சாக்குகளை கூறுகிறார்கள்," என்று அவர் மேலும் கூறினார்.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்குப் பிறகு எஸ்.பி.ஐ வெளியிட்ட தரவுகளின்படி, லாட்டரி நிறுவனமான பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் - தேர்தல் பத்திரங்களை அதிகம் வாங்கிய நிறுவனம் - 2019 மற்றும் 2024-க்கு இடையில் ரூ. 1,300 கோடிக்கு மேல் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியது. இதில் அதிகபட்சமாக டி.எம்.சிக்கு ரூ.542 கோடி வழங்கியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/cities/kolkata/electoral-bond-data-dont-know-who-bought-bonds-kept-drop-box-at-party-office-for-such-donations-tmc-9230910/
டி.எம்.சி கட்சியின் மற்ற நன்கொடையாளர்கள்: ட்ரான்ஸ்வேஸ் எக்சிம் பிரைவேட் லிமிடெட், கெவென்டர் ஃபுட்பார்க் இன்ஃப்ரா லிமிடெட், ரஷ்மி சிமென்ட் லிமிடெட், ராகுல் பாட்டியா, வெஸ்ட்வெல் கேஸ் பிரைவேட் லிமிடெட், பிலிப்ஸ் கார்பன் பிளாக் லிமிடெட், மிஸ்ரிலால் மைன்ஸ் பிரைவேட் லிமிடெட், ஹிமாலயன் எண்டெவர் பிரைவேட் லிமிடெட், எஸ்.வால் ரமேஷ், எம். பாட்டில்லிங், PL Ripley & Co Stevedoring & Handling Pvt, Castle Liquors Private Limited மற்றும் Monalisa Bottling Industries Pvt Ltd ஆகியவை ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“