கேரளாவில் மக்களவை தேர்தலுக்காக, மேலும் நான்கு வேட்பாளர்களை பா.ஜ.க ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. கேரளாவில் ஏப்ரல் 26 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில், பாஜக தலைமையிலான என்.டி.ஏ 16 இடங்களுக்கு வேட்பாளர்களை முன்பே அறிவித்தது. சி.பி.ஐ(எம்) தலைமையிலான எல்.டி.எஃப் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் ஆகிய கட்சிகள் ஏற்கனவே அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.
வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாக இருப்பவர் ராகுல் காந்தி என்பதால், பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் போட்டியிடுகிறார். அங்கு எல்.டி.எப் வேட்பாளராக சி.பி.ஐ தேசிய தலைவர் அன்னி ராஜா போட்டியிடுகிறார்.
சுரேந்திரன் ஒரு அனுபவமிக்க வேட்பாளர், 2009 முதல் மூன்று மக்களவைத் தேர்தல்களிலும் போட்டியிட்டார். சுரேந்திரன் மேலும் நான்கு சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டார். 2021ல், அவர் ஒரே நேரத்தில் கொன்னி மற்றும் மஞ்சேஷ்வர் தொகுதிகளில் போட்டியிட்டார். 2016ல் சுரேந்திரன் மஞ்சேஷ்வர் தொகுதியில் வெறும் 86 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
எர்ணாகுளத்தில் காங்கிரஸ் ஆட்சியின் போது, மாநில பொதுப்பணித்துறையின் தலைவராகவும், சமஸ்கிருத பல்கலைகழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றிய டாக்டர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் என்பவர்தான் பா.ஜ.க வேட்பாளராக உள்ளார். இவர் 2021 சட்டமன்றத் தேர்தலில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள திரிபுனித்துரா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
கொல்லத்தில் பா.ஜ.க வேட்பாளராக நடிகர் ஜி கிருஷ்ணகுமார் போட்டியிடுகிறார். பா.ஜ.க தேசிய கவுன்சில் உறுப்பினரான கிருஷ்ணகுமார் 2021 சட்டமன்றத் தேர்தலில் திருவனந்தபுரத்தில் போட்டியிட்டார். ஆலத்தூர் (எஸ்சி) தொகுதியில், முன்னாள் கல்லூரி முதல்வர் டாக்டர் டி என் சரசு, பா.ஜ.க வேட்பாளராக உள்ளார்.
2016-ம் ஆண்டு பாலக்காட்டில் உள்ள அரசு விக்டோரியா கல்லூரியில் முதல்வராக பணியாற்றிய போது சரசு தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார். சி.பி.ஐ(எம்)-யின் மாணவர் பிரிவான எஸ்.எப்.ஐ.யை சேர்ந்த மாணவர்கள் அவர் ஓய்வு பெறுவதை முன்னிட்டு வளாகத்தில் அடையாள கல்லறையை தயார் செய்திருந்தனர்.
Read in english
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“