நரேந்திர மோடி அரசுக்கு எதிராக மக்களவையில் நேற்று (ஜூலை 26) காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தப் பிறகு அனைவரது கவனமும் சபாநாயகர் தீர்மானத்தின் மீது திரும்பியுள்ளது. சபாநாயகர் இதற்கான விவாதத்திற்கு எப்போது தேதி, நேரம் ஒதுக்குவார் என்று எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததன் மூலம் மணிப்பூர் விவகாரம் குறித்துப் பிரதமர் மோடி பேச வேண்டும் என்பதை கட்டாயப்படுத்துகிறது.
இன்றும் நாடாளுமன்றத்தில் இவ்விவகாரம் எதிரொலிக்கும் என்றும் போராட்டங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன. பா.ஜ.கக்கு எதிரான எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் எம்.பி.க்களை கருப்பு உடை அல்லது சட்டை அணி எதிர்ப்பு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. தொடர்ந்து கவுரவ் கோகோய் முன்வைத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வியூகத்தை வகுக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று ஆலோசனை மேற்கொண்டு விவாதத்தை உடனடியாக மேற்கொள்ள அழுத்தம் கொடுப்பார்கள்.
தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டுக் குழு அறிக்கையின்படி இன்று, ஜன் விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்தம்) 2023 மசோதா, கடலோரப் பகுதிகள் கனிம (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா 2023 ஆகியவற்றை நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கிடையில், இன்று பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு செல்ல உள்ளார். அவர் முதலில் ராஜஸ்தானின் சிகார் நகருக்குச் செல்கிறார், அங்கு காலை 11.15 மணியளவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
அங்கு எதிர்க்கட்சிகள் மீது விமர்சனம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் பிற்பகல் 3.15 மணியளவில் குஜராத்தின் ராஜ்கோட்டை சென்றடையும் மோடி, அங்கு புதிய ராஜ்கோட் சர்வதேச விமான நிலையம் மற்றும் பிற திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மாலை 4.15 மணியளவில், ராஜ்கோட்டில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
மேற்கு வங்கம்
மேற்கு வங்க சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து புயலாக இருந்து வருகிறது. அண்மையில் நடந்த பஞ்சாயத்து தேர்தல் கலவரமாக மாறியது. இதில் 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாக கூறி பா.ஜ.க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர முயற்சித்து வருகிறது. இதனால் இன்றும் சட்டப்பேரவையில் அதிக எதிர்ப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. நேற்று சபாநாயகர் பிமன் பானர்ஜி, "நடைமுறை குறைபாடுகளை" மேற்கோள் காட்டி, "மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்" பற்றி விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சியின் முன்மொழிவை நிராகரித்தார். இந்த முடிவால் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”