பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் இன்று (ஏப்ரல் 22) தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் சில சுற்றுலா பயணிகள் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: At least 20 dead, 10 injured in militant attack on tourists in J&K’s Pahalgam
கிடைக்கப்பெற்ற தகவலின் படி, பஹல்காமில் உள்ள சாலைக்கு அப்பாற்பட்ட புல்வெளியான பைசரன் என்ற இடத்தில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
"பைசரானில் சுற்றுலாப் பயணிகள் மீது இரண்டு அல்லது மூன்று தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக எங்கள் அறிக்கைகள் கூறுகின்றன" என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
பைசரன் பகுதிக்கு கால் நடையாக மட்டுமே செல்ல முடியும். இது ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். சுற்றுலாப் பருவத்தில் இங்கு கூட்டம் அதிகமாக இருக்கும்.
தாக்குதல் குறித்து தகவலறிந்த போலீஸ் குழு, ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு காயமடைந்த சுற்றுலா பயணிகளை மீட்கும் பணியிலும், தாக்குதல் நடத்தியவர்களை கண்டறியும் நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபட்டனர்.
இந்த ஆண்டில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய முதல் தாக்குதல் இதுவாகும். கடந்த ஆண்டு மே மாதம் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இரண்டு சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். அந்த சம்பவமும் பஹல்காமில் நடந்தது.
இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார். மேலும், சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தொலைபேசியில் உரையாடினார். இந்நிலையில், ஜெட்டாவில் இருந்து ஸ்ரீநகருக்கு அமித்ஷா செல்கிறார்.
"ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படுகின்றன. இந்த கொடூர செயலின் பின்னணியில் உள்ளவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் தப்பிக்க முடியாது. அவர்களின் தீய செயல் திட்டங்கள் ஒருபோதும் வெற்றியடையாது" என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலா பயணிகள் மீதான தாக்குதலுக்கு மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி) தலைவர் மெகபூபா முப்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
"பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான கோழைத்தனமான தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுபோன்ற வன்முறைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை மற்றும் கண்டிக்கப்பட வேண்டியவை. வரலாற்று ரீதியாக, காஷ்மீர் சுற்றுலாப் பயணிகளை அன்புடன் வரவேற்றது. இது போன்ற சம்பவம் கவலையை ஏற்படுத்துகிறது" என அவர் பதிவிட்டுள்ளார்.