MMTS Train Accident Kacheguda, Hyderabad: ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் வந்ததால், ஐதராபாத் காச்சிகுடா ரயில் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது. இதில் கொங்கு எக்ஸ்பிரஸ் ரயிலுடன் மற்றொரு ரயில் மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
கோவை- டெல்லி இடையே கொங்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் இன்று ஹைதராபாத், காச்சிகுடா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது அதே பிளாட்ஃபார்ம் தண்டவாளத்தில் ஹைதராபாத்- செகந்திராபாத் இடையிலான இன்னொரு ரயிலும் வந்தது.
இரு ரயில்களும் முட்டிக் கொண்டதில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்ததாக முதல்கட்டத் தகவல் கூறுகிறது. காயமடைந்த பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து நடைபெற்றதாக தெற்கு மத்திய ரயில்வே அதிகாரிகள் கூறினர்.
இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து தொடர்பான முழு தகவல்கள் இன்னும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.