நீண்ட விவாதத்திற்கு பின், முத்தலாக் தடை மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது. தொடர்ந்து இந்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
முஸ்லிம் சமூகத்தில், மூன்று முறை, 'தலாக்' கூறி விவாகரத்து பெறும் முறையை குற்றமாக்கும், முத்தலாக் சட்ட மசோதா, லோக்சபாவில் கடந்த 25ம் தேதி நிறைவேறியது. தொடர்ந்து, இந்த மசோதா ராஜ்யசபாவில் இன்று(ஜூலை 30) தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ், அதிமுக கட்சிகள் வெளிநடப்பு செய்தன. ஓட்டெடுப்பில் டிஆர்எஸ் , தெலுங்கு தேசம், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்த மசோதாவிற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன.. பார்லிமென்ட் நிலை குழுவிற்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தின.
அனைத்து கட்சிகள் பேசிய பின்னர், அனைவருக்கும் சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பதிலளித்து பேசினார். இதன் பின்னர், ராஜ்யசபாவில் ஓட்டெடுப்பு நடந்தது. இதில் மசோதாவிற்கு ஆதரவாக 99 ஓட்டுகளும், எதிராக 84 ஓட்டுகளும் கிடைத்தன. இதன் மூலம் இந்த மசோதா நிறைவேறியதாக அவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். விரைவில் இந்த மசோதா, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்தியா மகிழ்ச்சி அடைகிறது:மோடி : முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார். து தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ஏற்று கொள்ள முடியாத ஆதிகாலம் தொட்டு கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறை வரலாற்றின் குப்பைதொட்டியில் வீசப்பட்டுள்ளது. முத்தலாக்கை பார்லிமென்ட் ரத்து செய்ததுடன், முஸ்லிம் பெண்களுக்கு வரலாறு செய்த தவறு சரி செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதா சமூக நீதிக்கான வெற்றியாகும். சமூகத்தில் சமநிலையை மேலும் பலப்படுத்தும். இந்தியா இன்று மகிழ்ச்சி அடைகிறது.