திருப்பதியில் மாயமான ரூ. 500 கோடி நகைகள் சுவிச்சர்லாந்தில் ஏலம் விடப்பட்டுள்ளதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜய்சாய் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக திருப்பதி தேவஸ்தானம் பரபரப்பான குற்றச்சாட்டுகளை சந்தித்து வருகிறது. திருமலா திருப்பதி கோயிலில் ரூ.500 கோடி மதிப்புமிக்க பிங்க் நிற வைரம் மாயமாகி உள்ளது அதனைத்தொடர்ந்து, ஏராளமான நகைகளும் காணாமல் போயுள்ளதாக கோயிலின் அர்ச்சகர் பரபரப்பு புகாரை தெறிவித்திருந்தார்.
மாயமான ரூ.500 கோடி மதிப்புள்ள வைரக்கல் ஜெனிவாவில் ஏலத்தில் விடப்பட்டுள்ளதாகவும் பகீர் குற்றச்சாட்டுக்கள் பரவின. இந்நிலையில் தான் தேவஸ்தான நிர்வாகிகளை முதல்வர்தான் நியமிக்கிறார் எனவும், அவர் தனது அரசியல் தேவைக்காக சுமார் திருப்பதி கோவில் பணம் ரூ.100 கோடியை பயன்படுத்தியதாகவும், பிரசாதம் தயாரிக்கும் கோவில் சமையலறைக்கு கீழே பாதுகாக்கப்பட்டு வந்த விலைமதிக்கத்தக்க பல ஆபரணங்களை திருடப்பட்டிருபதாகவும் பகீர் குற்றச்சாட்டுக்கள் அடுத்தடுத்தாக வெளிவந்தன.
இந்த குற்றச்சாட்டை அர்ச்சகர் ரமணா தீக்சித்துலு என்பவர் தான் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். முதல்வர் சந்திரபாபு நாயுடு குறித்து இவர் கூறிய குற்றச்சாட்டுக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜய்சாய் ரெட்டி திருப்பதி நகைகள் ஏலம் விடப்பட்டது உண்மை என்றும் அதற்கான ஆதரங்கள் தன்னிடம் இருப்பதாக கூறி பகீர் கிளப்பியுள்ளார். இதுக்குறித்து அவர் பேசியிருப்பது, “நகைகள் காணாமல் போன விவகாரத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் தொடர்பு உண்டு. பிளாட்டினத்தால் செய்யப்பட்ட பிங்க் நிறவைரம் பதித்த நெக்லஸ் ரூ.500 கோடிக்கு சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் சமீபத்தில் ஏலம் விடப்பட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையானுக்குப் பிளாட்டினத்தில் செய்யப்பட்ட ஒரு விலைமதிப்புள்ள ஒரு நெக்லஸும் அடங்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ரமண தீட்சிதலு, புதுடெல்லி சென்று பாஜ தேசிய தலைவர் அமித்ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து, இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.