அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு விசாரித்து வருகிறது. "ராமரின் (ரகுவம்சம்) வம்சாவளிகள் இன்னும் அயோத்தியில் வசித்து வருகிறார்களா?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதைத் தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அரச குடும்பத்தை சேர்ந்தவரும், பா.ஜனதா பெண் எம்.பி.யுமான தியா குமாரி, 'நான் ராமரின் வம்சாவளி' என்று தடாலடியாக அறிவித்தார். மேலும், அவர் கூறுகையில், "ராமரின் வம்சாவளியினர் இன்னும் இருக்கிறார்களா? என்று நீதிமன்றம் கேட்டுள்ளது. ராமரின் பரம்பரையை சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். என் குடும்பம், ராமரின் மகன் குஷாவின் பரம்பரையை சேர்ந்தது.
ஜெய்ப்பூர் அரச குடும்பத்து பாஜக எம்பி தியா குமாரி
அதற்கான கையெழுத்து பிரதிகள், மரபணு ஆதாரங்கள், ஆவணங்கள், அரச குடும்பத்திடம் உள்ளன. தேவைப்பட்டால், அந்த ஆதாரங்களை நீதிமன்றத்தின் சமர்ப்பித்து அதை நிரூபிப்பேன். ஆனால், நீதிமன்ற விசாரணையில் தலையிட மாட்டேன்" என்றார்.
அதுபோல், மேவார் - உதய்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த மஹேந்திர சிங்கும் உரிமை கோரியுள்ளார். இது குறித்து அவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், "நான் தான் கடவுள் ராமரின் 232வது வாரிசு. நாங்கள் அவரது நேரடி வாரிசுகள். அயோத்தியில் எந்த இடத்திற்கும் நாங்கள் உரிமை கோரவில்லை. ஆனால், கோயில் அந்த இடத்தில் தான் நிச்சயம் கட்டப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.