ஏக்நாத் ஷிண்டேவின் முதலமைச்சர் சீருடை எப்போது வேண்டுமானாலும் கழற்றப்படும், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் 22 பேர் பாரதிய ஜனதா கட்சியில் விரைவில் இணையப் போகின்றனர் என உத்தவ் தாக்கரே அணியினர் கூறியுள்ளனர்.
உத்தவ் தாக்கரே தலைமையிலான அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில், “சிவசேனாவின் 40 கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்களில் 22 பேர் விரைவில் பாரதிய ஜனதா கட்சியில் இணைய போகின்றனர்” எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், “ஏக்நாத் ஷிண்டேயின் முதலமைச்சர் சீருடை எப்போது வேண்டுமானாலும் கழற்றப்படும்” எனவும் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, “ஷிண்டே அணியினர் கிராம பஞ்சாயத்துக்களில் வெற்றி பெற்றுள்ளனர் என்ற கூற்று தவறானது. உண்மையில் ஷிண்டே அணியில் உள்ள 22 எம்.எல்.ஏ.க்கள் வருத்தத்தில் உள்ளனர்.
அவர்கள் தங்களை பாஜகவுடன் இணைத்துக் கொள்வார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. மேலும் ஷிண்டேவின் செயல்கள் மக்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனை மராட்டிய மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். ஷிண்டேவை தனது நலனுக்காக பாஜக தொடர்ந்து பயன்படுத்திவருகிறது.
எங்கு பார்த்தாலும் தேவேந்திர ஃபட்னாவிஸ்தான் காணப்படுகிறார். முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை காணவில்லை. தாராவியில் உள்ள சேரியை அகற்றுவதில் தேவேந்திர ஃபட்னாவிஸ் தீவிரமாக செயல்படுகிறார்.
அதற்காக புதிய திட்டத்துக்கு டெல்லி சென்று ஒப்புதல் பெற்றுள்ளார். இந்த முக்கியமான திட்டத்தில் ஷிண்டே பங்களிப்பு எங்கும் இல்லை. தாராவின் மறுவடிவமைப்பு முழு பெருமையும் தேவேந்திர ஃபட்னாவிஸ்-ஐ சேரும்” எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil