ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசு, அரசியலமைப்பின் 370-வது பிரிவில் திருத்தம் மேற்கொண்டு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை லடாக், ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இந்திய அரசின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தியாவுடன் வர்த்தக உறவு, ரயில், பஸ் போக்குவரத்தையும் ரத்து செய்தது. சர்வதேச அளவில் காஷ்மீர் விவகாரத்தை பாக்., கொண்டு சென்று வருகிறது. மேலும், ஐ.நா.வில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சனையை பிரதானமாக எழுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டிருந்தது.
அதன்படி நேற்று ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 42-வது கூட்டத்தில் காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தான் கேள்வி எழுப்பியது. ஜம்மு காஷ்மீரில் பல்வேறு மனித உரிமை மீறல்கள் நடப்பதாக கூறி அங்கு சர்வதேச விசாரணை தேவை என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை இந்தியா நிராகரித்தது. இதில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி , காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச அளவில் விசாரணை நடத்துவது அவசியம் என்றார். இந்த நிலையில் இதற்கு இந்தியா 'எங்களது உள் நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிட வேண்டாம்' என்று கூறி நிராகரித்தது.
இந்நிலையில், ஐ.நா தலைவர் அன்டோனியோ குடரெஸ், காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரிக்கும் அசாதாராண சூழல் குறித்து கவலை தெரிவித்ததோடு, பேச்சுவார்த்தை மூலம் மூலம் அதைத் தீர்க்க இரு தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஐ.நா. தலைவரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறுகையில், " அவரது (அன்டோனியோ குடரெஸ்) தகவல் அவர்கள் அனைவருக்கும்(இந்தியா, பாகிஸ்தான்) பொதுவாகவும், தனிப்பட்ட முறையிலும் ஒரே மாதிரியாக இருக்கிறது. இந்த நிலைமை குறித்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஏதேனும் சாத்தியமான முன்னேற்றம் இருக்கிறதா என்பது குறித்து அவர் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். உரையாடலின் மூலம் பிரச்சினையை சமாளிக்க அவர் இரு தரப்பினருக்கும் வேண்டுகோள் விடுக்கின்றார்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கிடையேயான மத்தியஸ்தம் குறித்து அவர் கூறுகையில், "இரு நாடுகளுக்கிடையே எங்களது தலையீடு என்பது எப்போதும் போல கொள்கைபடியே இருக்கும்" என்றார்.
முன்னதாக, ஐ.நா.வை இந்த பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் அணுகிய பின்னர், ஐ.நா வெளியிட்ட அறிவிப்பில், "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்பான 1972 ஒப்பந்தம், சிம்லா ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படுகிறது, ஜம்மு-காஷ்மீரின் இறுதி நிலை ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின்படி அமைதியான வழிமுறைகளால் தீர்க்கப்பட வேண்டும்" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.