Advertisment

குடும்பக் கட்டுப்பாடு குறித்து சர்ச்சை கருத்து; இருகரம் கூப்பி மன்னிப்பு கேட்ட நிதிஷ் குமார்

படித்த பெண்கள் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு குறித்த சர்ச்சை கருத்துகள்; எதிர்கட்சிகள் விமர்சனம், மகளிர் ஆணையம் கண்டனம்; கூப்பிய கைகளுடன் மன்னிப்புக் கேட்டார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

author-image
WebDesk
New Update
nitish kumar

பாட்னாவில், நவம்பர் 8, 2023 புதன்கிழமை, மாநில சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரின் போது பீகார் முதல்வர் நிதிஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசுகிறார். (PTI புகைப்படம்)

படித்த பெண்கள் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு குறித்த அவரது கசப்பான கருத்துகள் சர்ச்சையைத் தூண்டி, தேசிய மகளிர் ஆணையத்தின் (NCW) கண்டனத்துக்கும், எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கும் வழிவகுத்த ஒரு நாள் கழித்து, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் புதன்கிழமை தனது அறிக்கைக்கு கூப்பிய கைகளுடன் மன்னிப்பு கேட்டார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Under attack for crude remark on family planning, Bihar CM Nitish Kumar apologises

இவ்வளவு விமர்சனத்தை வரவழைக்கும் சில விஷயங்களை நான் கூறியிருந்தால்... நான் கூறியது தவறாக இருந்தால், அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் என் வார்த்தைகளை திரும்பப் பெறுகிறேன். எனது கருத்துக்கள் விமர்சிக்கப்பட்டிருந்தால், நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், ”என்று நிதிஷ் குமார் சட்டசபை கூட்டத் தொடரின் மூன்றாவது நாள் தொடங்குவதற்கு சற்று முன்பு கூறினார்.

செவ்வாயன்று, பீகார் சட்டப் பேரவையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை குறித்து பேசிய நிதிஷ் குமார், படித்த பெண்கள் எப்படி கர்ப்பமாவதை தவிர்க்கின்றனர் என்று பேசினார். ஒரு படித்த பெண், உடலுறவு கர்ப்பத்தில் முடிவடையாது என்பதை உறுதிப்படுத்த முடியும் என்றும், இது மக்கள்தொகையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என்றும் முதல்வர் நிதிஷ் குமார் பரிந்துரைத்தார். சட்டப் மேலவையில் தனது உரையின்போதும் முதல்வர் இதே கருத்தை மீண்டும் கூறினார்.

புதன்கிழமை காலை செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், “தேசிய அளவில் ஆணும் பெண்ணும் மெட்ரிக் தேர்ச்சி பெற்றிருந்தால் (10 ஆம் வகுப்பு தேர்ச்சி) கருவுறுதல் விகிதம் 2 ஆக இருப்பதைக் கண்டறிந்துள்ளோம். பீகாரிலும், ஆணும் பெண்ணும் மெட்ரிக் தேர்ச்சி பெற்றிருந்தால், கருவுறுதல் விகிதம் 2 ஆக உள்ளது. பெண் (பட்டம் பெற்றிருந்தால்) இடைநிலை அல்லது அதற்கு மேற்பட்ட (வகுப்பு 12 அல்லது அதற்கு மேல்) படிப்பை படித்திருந்தால் தேசிய அளவில், கருவுறுதல் விகிதம் 1.7 ஆகும். பீகாரில் இது 1.6 ஆக இருந்தது.

"இதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், நம் பெண்களுக்கு விரைவாக கல்வி கற்பிக்க வேண்டும் என்று நினைத்தேன். மாநிலம் முழுவதும் இடைநிலை (12 ஆம் வகுப்பு) வரை கல்வியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டோம், ”என்று நிதிஷ் குமார் கூறினார்.

நிதிஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க தலைவரும், பீகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான விஜய் குமார் சின்ஹா ​​கூறினார். "அவர் இனி சட்டசபைக்கு தகுதியானவர் அல்ல... துணை முதல்வர் பாலியல் கல்வி பற்றி பேசுகிறார். இரண்டு அமைச்சர்களும் தகுதியான குணம் கொண்டவர்கள் அல்ல,” என்று விஜய் குமார் சின்ஹா கூறினார்.

எனது கருத்துக்களுக்கு எதிராக பெரிய அளவில் நிறைய எழுதப்படுகிறது. பெண்களுக்கு கல்வி அளிப்பது பற்றி நான் அதிகம் பேசினேன், மேலும் ஆரம்பத்தில் மிகக் குறைவான பெண்கள் எப்படி கல்வி கற்க முடியும் என்பதை நான் வலியுறுத்தியுள்ளேன், மேலும் அந்த எண்ணிக்கையை உயர்த்தியுள்ளோம்... கல்வி இல்லாத இடங்கள் நிறைய இருந்தன, எனவே நாங்கள் அந்த மக்களுக்கு கல்வி கற்பிக்க முயற்சித்தோம்,” என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறினார்.

நிதிஷ் குமாரிடம் இருந்து "உடனடி மற்றும் சந்தேகத்திற்கு இடமில்லாத மன்னிப்பு" கோரிய தேசிய மகளிர் ஆணையம், அவரது "மோசமான கருத்துக்கள்" "ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிய கண்ணியம் மற்றும் மரியாதைக்கு அவமானம்" என்று கூறியது. பா.ஜ.க எம்.எல்.சி நிவேதிதா சிங் கண்ணீருடன் சபையில் இருந்து வெளியே வந்து பின்னர் கூறினார்: அவரது ஆழ்ந்த அறிவுக்கு பெயர் பெற்ற முதல்வரின் பேச்சைக் கேட்க நாங்கள் வந்தோம். ஆனால் அவர் என்ன சொன்னார், எப்படி சொன்னார் என்பது குறித்து நாங்கள் திகைத்துப் போனோம்.”

இதற்கிடையில், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், நிதிஷ் குமாரின் கருத்துக்களை தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது என்று கூறினார். "ஒருவர் அதை தவறான அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாது. மக்கள் சில நேரங்களில் அதைப் பற்றி பேச வெட்கப்படுகிறார்கள் ஆனால் பள்ளிகளில் பாலியல் கல்வி கற்பிக்கப்படுகிறது. இது உயிரியல், குழந்தைகள் அதைப் படிக்கிறார்கள்,” தேஜஸ்வி யாதவ் கூறினார்.

"நாங்கள் அனைவரும் வெட்கப்பட்டோம், முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது இல்லாவிட்டால் சபை நடவடிக்கைகள் ஸ்தம்பிக்கப்படலாம்... இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து நாங்கள் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளோம், இப்போது எந்த விலகலையும் விரும்பவில்லை," என்று ஒரு JD(U) தலைவர் கூறினார். செவ்வாய்கிழமை மாலை மாநில அமைச்சரவை 60 சதவீதத்தில் இருந்து (10 சதவீதம் EWS) 75 சதவீதமாக உயர்த்த முடிவு செய்தது மற்றும் தற்போதைய சட்டமன்ற கூட்டத்தொடரில் இடஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Nitish Kumar Bihar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment