மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செவ்வாய்க்கிழமை (ஜன.24), “மூன்று வழக்கறிஞர்களை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பது தொடர்பான அரசின் ஆட்சேபனையை உச்ச நீதிமன்றம் பகிரங்கப்படுத்தியது” எனக் கூறினார்.
முன்னதாக, ஜனவரி 19 அன்று, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஐந்து வழக்கறிஞர்களை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும் முடிவை மீண்டும் வலியுறுத்தியது.
அப்போது, மீண்டும் வலியுறுத்துவதற்கான காரணங்கள் மற்றும் அரசாங்கத்தின் ஆட்சேபனைகள் ஆகிய இரண்டையும் பகிரங்கப்படுத்தியது. உச்ச நீதிமன்ற கொலிஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட 3 நீதிபதிகளில் ஒருவர் தன்பாலின ஈர்ப்பாளர் ஆவார்.
அவரது இணை வெளிநாட்டைச் சேர்ந்தவர். இரண்டாம் நபர் வழக்குரைஞராக இருந்த நாள்களில் பிரதமர் நரேந்திர மோடி மீது விமர்சன பதிவுகளை கூறியுள்ளார். மற்றொருவர் சமூக வலைதளத்தில் அரசை விமர்சித்தவர் ஆவார்.
மேலும் இவர்களில் மூத்த வழக்கறிஞர் சவுரப் கிர்பால் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டார். வழக்கறிஞர் சோம்சேகர் சுந்தரேசன் பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர் ஜான் சத்யன்; வழக்கறிஞர்கள் சக்யா சென் மற்றும் அமிதேஷ் பானர்ஜி ஆகியோர் கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, “ரகசிய அறிக்கைகளை பொது களத்தில் வைப்பது மிகவும் கவலைக்குரிய விஷயம். ஆனால் இதைப் பற்றி நான் சரியான நேரத்தில் பேசுவேன். அது தாக்கங்களை ஏற்படுத்தும்” என்றார்.
முன்னதாக இந்த பெயர்களை மறுபரிசீலனை செய்யுமாறு கடந்த ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி அரசு கோரியிருந்தது.
இதற்கு முன், சட்ட அமைச்சர், ஓய்வுபெற்ற டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியான ஆர்.எஸ்.சோதியின் நேர்காணல் கிளிப்பைப் பகிர்ந்துள்ளார்,
அதில் அவர், உச்ச நீதிமன்றம் தன்னிச்சையாக நீதிபதிகளை நியமிக்க முடிவு செய்ததன் மூலம் அரசியலமைப்பை "ஹைஜாக்" செய்ததாகக் கூறினார்.
தொடர்ந்து, ரிஜிஜூ, “உண்மையில் பெரும்பான்மையான மக்கள் ஒரே மாதிரியான விவேகமான பார்வைகளைக் கொண்டுள்ளனர்” என ட்வீட் செய்திருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/