உன்னாவ் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு : 17 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் பாஜக எம்.எல்.ஏவின் மீது பாலியல் வழக்கு ஒன்றினை கடந்த ஏப்ரல் மாதம் பதவி செய்தார்.
கடந்த வருடம், உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் பங்கர்மாவ் தொகுதி எம்.எல்.ஏ குல்தீப் செங்கரின் வீட்டிற்கு வேலை தேடி இப்பெண் தன்னுடைய உறவினருடன் சென்றுள்ளார்.
குல்தீப் செங்கர் என்ற அந்த பாஜக எம்.எல்.ஏ அந்த பெண்ணை தொடர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி உள்ளார். மேலும் அப்பெண் மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமையும் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு செய்யக்கோரி உத்திரப்பிரதேச முதல்வர் யோகி முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு செய்வதற்காக டெல்லி சென்று திரும்பிய அப்பெண்ணின் தந்தையை அடித்து காவல் நிலையக் காவலில் வைத்திருக்கிறார்கள். காவலில் இருக்கும் போதே அவர் இறந்துவிட்டார்.
அவர் இறந்த பின்பு, இச்சம்பவம் தேசம் முழுவதும் பரவி பெரிய சர்ச்சையாக உருமாறியது. இதனை அடுத்து, இந்த பாலியல் வழக்கினை சிபிஐயிடம் கொடுத்தது மாநில அரசு. விசாரணை மேற்கொண்ட சிபிஐ, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையை கொன்ற வழக்கில் எம்.எல்.ஏவின் சகோதரர் உட்பட ஐவரை குற்றவாளிகள் என்று சனிக்கிழமை வழக்கு பதிவு செய்தது. அவர்கள் அனைவரையும் கைது செய்து லக்னோ சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
இன்று தாக்கல் செய்யப்பட்ட சார்ஜ்ஷீட்டில் பாஜக எம்.எல்.ஏவினை குற்றவாளி என இன்று அறிவித்த சிபிஐ அவரை கைது செய்து சீதாப்பூர் மாவட்ட சிறையில் அடைத்திருக்கிறது.