உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர்கள், முலாயம் சிங் யாதவை ராவணன் என்றும், மாயாவதியை சூர்ப்பனகை என்றும் விமர்சித்து, மாநில அமைச்சர் நந்த் கோபால் குப்தா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் தற்போது முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ.க அரசு அமைந்துள்ளது. இந்தநிலையில், லக்னோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். இதில், பா.ஜ.க.வைச் சேர்ந்த மாநில அமைச்சர், நந்த் கோபால் குப்தா பேசுகையில், "ராமாயணத்தின் சில கதாபாத்திரங்களுக்கும், நம் அரசியல்வாதிகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளது. பகவான் ராமரிடம், ராவணன் தன் எதிர்காலம் குறித்து கேட்டார். அப்போது, கலியுகத்தில், நீ, உ.பி., யில், சமாஜ்வாதி நிறுவனர், முலாயம் சிங் யாதவாக பிறப்பாய் என ராமர் கூறியுள்ளார். அப்போது, ராவணனின் தம்பி, கும்பகர்ணன் மற்றும் மகன், மேகநாதனும், தங்கள் நிலை குறித்து கேட்டனர். நீங்கள், முலாயமின் சகோதரர் சிவ்பால் மற்றும் மகன், அகிலேஷ் யாதவாக பிறப்பீர்கள் என கூறியுள்ளார்.
மேகநாதனிடம், 'நீ கலியுகத்தில், அகிலேஷ் யாதவாகப் பிறந்து மக்களை ஏமாற்றி முதல்வராவாய் திகழ்வாய்' என ராமர் கூறியுள்ளார். அப்போது, ராவணனின் சகோதரி சூர்ப்பனகை, தன் வாழ்க்கை சீரழிந்து விட்டதாகக் கூறியுள்ளார். அதற்கு ராமர், 'கலியுகத்தில் நீ பகுஜன் சமாஜ் தலைவர், மாயாவதியாகப் பிறந்து, உ.பி.,யை சீரழிப்பாய் என கூறிஉள்ளார். இது ஒருபுறம் இருக்க, பகவான் ராமர், நரேந்திர மோடியாக பிறந்துள்ளார். பகவான் அனுமன், உ.பி., முதல்வர், யோகி ஆதித்யநாத்தாகப் பிறந்துள்ளார் என்று அவர் பேசினார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு, கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.