உத்தரபிரதேச மாநிலத்தில் தன் மகள் இறந்த செய்தியை அறிந்தும், உயிருக்கு போராடியவரை காப்பாற்றி தன் கடமையை செய்த காவலரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் சாஹரன்பூர் மாவட்டத்தில் படாகோன் எனும் பகுதியில், அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட ஒருவரை காப்பாற்ற, கான்ஸ்டபிள் பூபேந்திர தோமர் உள்ளிட்ட காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து கொண்டிருந்தனர்.
அப்போது, பூபேந்திர தோமருக்கு தன் வீட்டிலிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில், வந்த செய்தி அவருக்கு மிகுந்த துயரத்தை உருவாக்குவதாக இருந்தது. அவருடைய 27 வயது மகள் குளியலறையில் விழுந்து இறந்துவிட்டார் என்பதுதான் அந்த செய்தி. அவருடைய மகளுக்கு எந்தவொரு நோயும் இல்லாத நிலையில் திடீரென இறந்தார்.
ஆனால், அதற்கடுத்து தோமர் என்ன செய்தார் தெரியுமா? தாங்கிக்கொள்ள முடியாத தன் வலியை கட்டுப்படுத்திக்கொண்டு, அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட நபரை காப்பாற்ற விரைந்தார். அவருடைய சகாக்கள் வீட்டுக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டும் தோமர் மறுத்துவிட்டார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்நபர் காப்பாற்ரப்பட்டார்.
உயிருக்கு போராடிய நபரை காப்பாற்றுவதே தன் கடமை என அவர் தெரிவித்தார். செவிலியராக பணிபுரிந்துவந்த அவரது மகளுக்கு கடந்தாண்டு தான் திருமணம் நடைபெற்றது.
பூபேந்திர தோமரை டிஜிபி ஓ.பி.சிங் உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.