உத்தரபிரேதச மாநிலம் பிலிபிட் பகுதியில் உள்ள துவக்க பள்ளியில், இஸ்லாமிய கவிதை வாசிக்கப்படுவதாக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் அளித்த புகாரை தொடர்ந்து, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தின் பிசல்பூர் பகுதியில் அரசு துவக்க பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக புர்ஹான் அலி பணியாற்றி வருகிறார். காலையில் நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தின் போது, புர்ஹான் அலி, இஸ்லாமிய கவிஞர் முகம்மது இக்பால் 1902ம் ஆண்டில் எழுதிய கவிதையை, மாணவர்கள் வாசிக்க கட்டாயப்படுத்துவதாக அப்பகுதி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் புகார் அளித்தனர்.
இந்த புகார் மனுவை விசாரித்த பிஷல்பூர் பகுதி கல்வி அலுவலர் உபேந்திர குமார், தலைமை ஆசிரியர் புர்ஹான் அலியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு பேட்டியளித்த விஷ்வ இந்து பரிஷத் பிலிபிட் மாவட்ட தலைவர் அம்பரிஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளதாவது, மதரசாக்களில் பாடப்படும் இஸ்லாமிய கவிதையை , அரசு பள்ளியில் பாட மாணவர்களை வற்புறுத்துவது கண்டிக்கத்தக்கது. அதன்பேரிலேயே, இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.