/indian-express-tamil/media/media_files/2025/08/19/speaker-selvam-2025-08-19-18-20-36.jpg)
"கோப்புகளை ஏன் திருப்பி அனுப்புகிறீர்கள்?" - அதிகாரிகளிடம் சரமாரி கேள்வி எழுப்பிய சபாநாயகர்
புதுச்சேரி சட்டமன்றத்தின் உறுதிமொழிக் கூட்டத்தில், அரசின் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்படும் தாமதம் குறித்து சபாநாயகர் செல்வம் மற்றும் எம்.எல்.ஏக்கள் அதிகாரிகள் மீது கடுமையான கேள்விகளை எழுப்பினர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ளாட்சித்துறை தொடர்பான உறுதிமொழிக் கூட்டம் சட்டமன்ற கருத்தரங்க அறையில், தலைவர் பாஸ்கர் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார். கூட்டத்தில் பேசிய சபாநாயகர் செல்வம், உள்ளாட்சித்துறை மூலம் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்யவேண்டியுள்ளது. அதற்கான கோப்புகளுக்கு விரைவான அனுமதி கிடைப்பதில்லை. கோப்புகள் பல்வேறு காரணங்களுக்காக மீண்டும் மீண்டும் திருப்பி அனுப்பப்படுகின்றன. அதிகாரிகள் மட்டத்தில் முடிக்கப்பட வேண்டிய கோப்புகள் கூட ஆளுநர் வரை செல்வதால், தொகுதிகளில் வளர்ச்சிப் பணிகளைச் செய்ய முடியாமல் எம்.எல்.ஏக்கள் சிரமப்படுகின்றனர். அதிகாரிகள் தங்களுடைய மட்டத்திலேயே கோப்புகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சபாநாயகரைத் தொடர்ந்து, கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏக்கள், சட்டமன்ற உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் ஏற்படும் காலதாமதம் மற்றும் கோப்புகள் தேங்குவது குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். மேலும், எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு உள்ளாட்சித்துறையின் அனுமதி பெறுவதைத் தவிர்த்து, அந்தந்த துறைகள் நேரடியாகவே பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இக்கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் நாஜிம், செந்தில்குமார், சிவசங்கர், அனிபால் கென்னடி, நாக தியாகராஜன், லட்சுமி காந்தன், அரசு செயலர் கேசவன், இயக்குநர் சக்திவேல், நகராட்சி ஆணையர்கள் கந்தசாமி, சுரேஷ்ராஜ் மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.