2008-ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய தனிநபர்கள் மீதான வழக்கு விசாரணையில் அடுத்தகட்டத்தை குறிக்கும் வகையில், பாகிஸ்தானிய-கனடா நாட்டவரான தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: US Supreme Court clears way for extradition of 2008 Mumbai attack suspect Tahawwur Rana to India
ராணா தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் பிடித்து வைக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. மும்பை தாக்குதல் தொடர்பாக அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இந்தியா முயல்கிறது. கடந்த நவம்பர் 13-ஆம் தேதி, கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி ராணா தாக்கல் செய்த மனுவை, அமெரிக்க உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
தன்னை நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு சட்டப்பூர்வமான வழிகளில் ராணா மனுதாக்கல் செய்தார். இதன் தொடர்ச்சியாக அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட மனு தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது.
63 வயதான டேவிட் ஹெட்லி என்பவர் கடந்த 2009-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். அவருக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மும்பை தாக்குதல் தொடர்பான விவகாரத்தில் இந்த தண்டனை விதிக்கப்பட்டது. இவர் ராணாவின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, அக்டோபர் 2009 இல் சிகாகோவின் ஓ'ஹேர் விமான நிலையத்தில் ஹெட்லி கைது செய்யப்பட்ட உடனேயே, ராணா அமெரிக்க காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 2011 இல் சிகாகோவில் இந்தியத் தாக்குதலுக்கு LeTக்கு பொருள் உதவி வழங்கியது உள்ளிட்ட விவகாரங்களின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
2011ல், தாக்குதலை திட்டமிட்டு செயல்படுத்தியதற்காக ராணா உட்பட 9 பேர் மீது என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 2014 ஆம் ஆண்டில், டெல்லியில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம், தலைமறைவானவர்கள் என்று என்.ஐ.ஏ பட்டியலிட்ட நபர்களுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத புதிய வாரண்ட்களை பிறப்பித்தது.
ராணாவை இந்தியா வசம் ஒப்படைப்பது தொடர்பான நடவடிக்கைகளை அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா கடந்த ஆண்டு தொடங்கியது. இதற்காக டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் கூட்டம் நடத்தப்பட்டது.
சுமார் மூன்று மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில், ராணாவை நாடு கடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதற்காக இந்திய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும், அவரை சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில், ராணாவை நாடு கடத்துவதற்கு எதிரான மனுக்கள் அமெரிக்க நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டன.
பாகிஸ்தான் ராணுவத்தில் முன்னாள் மருத்துவரான ராணா, 1990களில் கனடாவுக்கு குடிபெயர்ந்தார், அங்கு அவர் குடியுரிமை பெற்றார். பின்னர் அவர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். மேலும், சிகாகோவில் குடியேற்றம் ஆலோசனை மையத்தை அவர் தொடங்கினார்.
2008 மும்பை தாக்குதலில் ராணாவின் தொடர்பு, லஷ்கர்-இ-தொய்பாவின் சார்பாக செயல்பட்ட ஹெட்லிக்கு உதவியதன் மூலம் உருவாகிறது. தாஜ் ஹோட்டல் மற்றும் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் போன்ற மும்பையின் முக்கிய இடங்களில் உளவு பார்த்த ஹெட்லி, ராணாவின் குடியேற்ற ஆலோசனை மையத்தின் ஊழியர் என்ற போர்வையில் செயல்பட்டார்.
- திவ்யா