மொபைல் செயலிகள் மூலம் சீனா பொதுவுடமைக் கட்சி தனிநபர் தகவல் பாதுகாப்புக்கும், தனிநபர் உரிமைக்கும் இடையூறு விளைவிப்பதாக கூறிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கேல் ஆர்.பாம்பியோ, 59 மொபைல் செயலிகளுக்கு தடை விதித்த இந்திய அரசின் செயலை தான் வரவேற்பதாகவும் தெரிவித்தார். இதற்கிடையே, இந்தியா-சீனா நிலைப்பாட்டை உள்ளடக்கிய, ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு மூலோபாய புதுப்பிப்பை அந்நாட்டு பிரதம மந்திரி ஸ்காட் மோரிசன் வெளியிட்டார்.
இந்தியா- சீனா எல்லைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதட்டத்தை தவிர்ப்பதற்கான முயற்சிகளை புதுடெல்லி மேற்கொள்ளும் வேளையில், ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, ஆசியான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் சீனாவை எதிர்கொள்வதற்கான நோக்க அடிப்படையிலான ஒத்துழைப்பு கூட்டணியை உருவாக்கி வருகின்றன.
வாஷிங்டன் டி.சி.யில் செய்தியாளர்களிடம் பேசிய மைக்கேல் ஆர்.பாம்பியோ ,“ இந்தியாவின் தடையை நாங்கள் வரவேற்கிறோம். மொபைல் செயலி குறித்த இந்தியாவின் தெளிவான அணுகுமுறை அதன் இறையாண்மையை பேணிகாக்கும். மேலும், ஒருமைப்பாடு, நாட்டின் பாதுகாப்பு அதிகரிக்கும்" என்று தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன், தேசத்ததின் அடுத்து 10 ஆண்டிற்கான பாதுகாப்பு மூலோபாய திட்ட கையேடை வெளியிட்டார். தேசத்தின் பாதுகாப்பில் நிலம், கடல் மற்றும் வான் சார்ந்த நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஸ்ட்ரைக் ஏவுகணைகளின் பங்களிப்பையும் முதன்முறையாக உள்ளடக்குகிறது.
இந்தியா-சீனா எல்லை மோதல் குறித்த கூறுகையில்," பிராந்திய உரிமைகோரல்கள் குறித்த பதட்டங்கள் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதிகரித்து வருகின்றன. இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட மோதல், தென் சீனக் கடல் விவகாரம், கிழக்கு சீனக் கடல் பகுதியில் நிலவும் பதட்டம் போன்றவைகளை நாம் கண்காணித்து வருகிறோம். நமது மதிப்பீடு பிழையாவதற்கும் ,மோதல்கள் அதிகரிப்பதற்கும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது . மோதலை தூண்டும் நடவடிக்கைகள் தற்போது பரவலாக காணப்படுகின்றன ”என்று மோரிசன் தெரிவித்தார்.
கடந்த செவ்வாயன்று, ஹாங்காங் பிரச்சனை தொடர்பாக தனது கடினமான கண்டனத்தை ஜப்பான் பதிவு செய்தது. "ஹாங்காங்கில் புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியதன் மூலம் ஒரு நாடு, இரு சமூக அமைப்பு கொள்கையில் சர்வதேச நம்பிக்கையை உலுக்கியுள்ளது" டோக்கியோ கூறியது.
கிழக்கு சீன கடலில், ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருக்கும் சென்காகு தீவுகளை, சீனா டியாவோயு தீவுகள் என்று பெயரில் உரிமை கொண்டாடி வருகிறது. இது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே ஏற்கனவே பதட்டமான சூழல் இருந்து வருகிறது.
கடந்த வாரம், இந்தியா- ஜப்பான் கடற்படைகள் தங்களது 15 வது கூட்டுப் பயிற்சியை (“goodwill training”) இந்தியப் பெருங்கடலில் மேற்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ஹவாய் டெக்னாலஜிஸ் மற்றும் இசட்இ கார்ப்பரேஷன் நிறுவனங்கள் "தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்" என்று யு.எஸ். ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் பட்டியலிட்டதை அடுத்து, சீன உற்பத்தியாளர்கள் மீதான கட்டுபாட்டை அமெரிக்கா மேலும் இறுக்குவதாகக் கருதப்படுகிறது. 5 ஜி தொழில்நுட்பம் தொடர்பாக இன்னும் தெளிவான நிலைப்பாட்டை எடுக்காத இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் அமெரிக்காவின் சமீபத்திய நடவடிக்கைகள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
சனிக்கிழமையன்று, தெற்காசிய நாடுகளின் சங்கத்தின் (ஆசியான்) 10 உறுப்பு நாடுகளின் சார்பாக வியட்நாம் ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டது. அதில்," சர்சைக்குரிகுய கடல் பகுதிகளில் உரிமை கோரல்கள் தொடர்பான பிரச்னைகள் அனைத்தும், 1982 வருட ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனத்தின் அடிப்படையில் தீர்க்கப்படவேண்டும்" என்று தெரிவித்தது.
பெய்ஜிங் தனது புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஹாங்காங்கில் முன்னெடுத்துச் செல்வதை கண்டித்து ஐரோப்பாவின் பல தலைவர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். நீடித்திருக்கக் கூடிய, நம்பிக்கைக்கு உரிய, நாடு சீனா என்பதை மறுமதிப்பீடு செய்ய வேண்டிய சூழல்கள் இருப்பதாகவும் அவர்கள் எச்சரிகின்றனர்.
ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் "நாங்கள் சீனாவின் மோசமான முடிவை விவாதித்து வருகிறோம்" என்று தெரிவித்தார். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன்," உறுப்பு நாடுகள் இது தொடர்பாக மற்ற நாடுகளை கலந்து ஆலோசித்து வருகிறது. சாத்தியமான நடவடிக்கைகளையும் பற்றி விவாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
உண்மையில், புது தில்லி அனைத்து நகர்வுகளையும் கவனமாக கவனித்து வருகிறது. எல்லை மோதல் தொடர்பாக சீனாவுடனான பேச்சுவார்த்தையை இந்தியா எவ்வாறு மேற்கொள்கிறது? என்பதை உலகளவில் கவனிக்கப்பட்டு வருகிறது என்று ஒரு மூத்த அதிகாரி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.