அமெரிக்க இராணுவ விமானத்தில் 104 சட்டவிரோத இந்தியக் குடியேற்றவாசிகளை நாடு கடத்திய பத்து நாட்களுக்குப் பிறகு, மேலும் 119 சட்டவிரோத குடியேற்றவாசிகள், இரண்டாம் கட்டமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: US military flight with 119 illegal Indian immigrants lands in Amritsar, more likely today
மேலும், மூன்றாம் கட்டமாக 157 பேர் நாடுபடத்தப்பட்டு இன்று இரவு அமிர்தசரஸில் தரையிறங்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சனிக்கிழமையன்று, 119 சட்டவிரோத குடியேற்றவாசிகள் C17 Globemaster III ரக இராணுவ விமானத்தில், இரவு 11:40 மணிக்கு அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கினர். இவர்களில் பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள் 67 பேரும், ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் 33 பேரும், குஜராத்தைச் சேர்ந்தவர்கள் 8 பேரும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் 3 பேரும், கோவா, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் தலா 2 பேரும், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவர்.
நாடு கடத்தப்பட்டவர்களில் ஆறு வயது சிறுமி உட்பட நான்கு பெண்கள் மற்றும் இரண்டு சிறார்களும் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.
பிப்ரவரி 5 ஆம் தேதி நாடு கடத்தப்பட்டவர்களின் முந்தைய தொகுப்பில், ஹரியானா மற்றும் குஜராத்தைச் சேர்ந்த 33 பேரும், பஞ்சாபைச் சேர்ந்த 30 பேரும் இடம்பெற்றிருந்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு பின்னர், நாடு கடத்தப்படுபவர்களுக்கு உணவு வழங்கி அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக தகவல்கள் கூறப்படுகிறது. "கோவா, குஜராத் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள், அரசு அதிகாரிகளால் ஒருங்கிணைக்கப்பட்ட அதிகாலை விமானங்களில் அனுப்பி வைக்கப்படுகின்றனர். பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்தவர்களை அழைத்துச் செல்ல வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன" என்று அமிர்தசரஸ் விமான நிலையத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.
இந்த மாதத்தின் தொடக்கத்தில், நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கை விலங்குகள் மற்றும் கால் விலங்குகள் இடப்பட்டு இராணுவ விமானத்தில் ஏற்றப்பட்ட காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அரசு, தனது சொந்த விமானத்தை அனுப்பி, அவர்களை கண்ணியமாக அழைத்து வர வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.
எனினும், அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்கள் மேலும் நாடு கடத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப், பல்வேறு சூழலில் தெரிவித்துள்ளார். மேலும், நாடு கடத்தப்படும் இந்தியர்களை திரும்பப் பெறுவதில் தயாராக இருப்பதாக பிரதமர் மோடியும் தெரிவித்துள்ளார்.
"சட்டவிரோதமாக வேறொரு நாட்டிற்குள் நுழைந்து வாழ்பவர்களுக்கு அந்த நாட்டில் வாழ சட்டப்பூர்வ உரிமையோ அல்லது அதிகாரமோ இல்லை என்று நாங்கள் கருதுகிறோம். எனவே, சட்ட விரோதமாக அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களை திரும்பப் பெறுவதில் நாங்கள் தயாராக உள்ளோம்" என மோடி குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில், நாடு கடத்தப்பட்டவர்களை ஏற்றிச் செல்லும் விமானங்களை அமிர்தசரஸில் தரையிறக்கும் மத்திய அரசின் முடிவை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் விமர்சித்துள்ளார். இது, பஞ்சாப் மற்றும் பஞ்சாபியர்களை இழிவுபடுத்தும் சதி என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
"பாதுகாப்புக் காரணங்களைக் கூறி அமிர்தசரஸில் இருந்து சர்வதேச விமானங்களை இயக்க அரசு அனுமதிக்காதபட்சத்தில், அமெரிக்க இராணுவ விமானங்கள் மட்டும் இங்கு தரையிறங்க எவ்வாறு அனுமதிக்க முடியும்?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
- Divya A , Kamaldeep Singh Brar