உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கணவனின் சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டதால், பச்சிளம் ஆண் குழந்தையை பெண் ஒருவர் விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோவில் உள்ள பேர்லி மாவட்டத்தை சேர்ந்தவர் சஞ்சு தேவி. இவருடைய கணவர் மௌரியா தினக்கூலியாக கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் ஒருவரின் வருமானத்தை நம்பியே இக்குடும்பத்தினர் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தபோது, மௌரியா மீது சுவர் விழுந்து படுகாயம் அடைந்திருக்கிறார்.
இந்நிலையில், மருத்துவமனை செலவுகளுக்காக சஞ்சு தேவி கடன் வாங்கியிருக்கிறார். மேலும், பிறந்து சில நாட்களே ஆன தன்னுடைய ஆண் குழந்தையை, குழந்தையில்லாத தம்பதியருக்கு ரூ.42,000க்கு விற்றிருக்கிறார்.
இந்த சம்பவம், உள்ளூர் ஊடகத்தில் செய்தியாக வெளியாகவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முற்பட்டன. மௌரியாவின் சிகிச்சைக்கான தொகையை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், குழந்தையை வாங்கிய தம்பதியினரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.