சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று (ஜன 27) பொது சிவில் சட்டம் அமலுக்கு வருகிறது.
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பது என அனைத்து முன்னேற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Today in Politics: Uttarakhand to become first state to implement UCC
குறிப்பாக, பொது சிவில் சட்டம் சமூகத்தில் சீரான நிலையை உருவாக்கி அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகள் மற்றும் பொறுப்பை உறுதி செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார். "நம் நாட்டை ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் தன்னம்பிக்கை கொண்ட தேசமாக மாற்றுவதற்கு பிரதமர் மோடி முயற்சி செய்து வரும் நிலையில், அதற்கு நம் மாநிலத்தின் சார்பாக செய்யும் ஒரு யாகம் தான் பொது சிவில் சட்டம்" என்று அவர் கூறியுள்ளார்.
2022-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றிய பா.ஜ.க, இந்த சட்டத்தை அமல்படுத்த தீவிரம் காண்பித்தது. உத்தரகாண்ட் மாநிலம் கடந்த 2000-ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டதில் இருந்து வேறு எந்தக் கட்சியும் இத்தகையை செயலை நிகழ்த்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் மாதம் தாமி தலைமையில் மீண்டும் அரசு அமைக்கப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட முதல் அமைச்சரவை கூட்டத்தில், பொது சிவில் சட்டத்தை உருவாக்க ஒரு நிபுணர் குழு அமைப்பதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இச்சட்டத்திற்கான வரைவைத் தயாரிப்பதற்காக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் ஒரு நிபுணர் குழு மே 27, 2022 அன்று அமைக்கப்பட்டது.
முன்னாள் தலைமைச் செயலாளர் சத்ருக்ன சிங் தலைமையிலான நிபுணர் குழு, சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை வகுக்க அமைக்கப்பட்டு, அதன் அறிக்கையை கடந்த ஆண்டு இறுதியில் மாநில அரசிடம் சமர்ப்பித்தது. மாநில அமைச்சரவை சமீபத்தில் இதற்கான ஒப்புதலை அளித்தது.
பொது சிவில் சட்டம் கூறுவது என்ன?
மாநிலத்தில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் ஒரே மாதிரியான தனிப்பட்ட சட்டங்களுடன், திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை தொடர்பான பிரச்சனைகளில் ஆண்களையும், பெண்களையும் சமமாக நடத்தும் விதிகளை பொது சிவில் சட்டம் அறிமுகப்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இத்தாத் மற்றும் ஹலால் போன்ற நடைமுறைகள் நிராகரிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. எனவே, பொது சிவில் சட்டத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.