Veteran lawer and former union minister Ram Jethmalani Passed away : முன்னாள் மத்திய அமைச்சரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞராகவும் பணியாற்றிய ராம் ஜெத்மலானி இன்று காலை மரணமடைந்தார். 1923ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவின் , பாகிஸ்தான் பகுதியில் அமைந்திருந்த சிந்து மாகாணத்தில் பிறந்தவர் ராம் ஜெத்மலானி.
வழக்கறிஞராக தன்னுடைய வாழ்வை துவங்கிய ராம்ஜெத் மலானி
தன்னுடைய பதினெட்டாவது வயதில் சட்டப் படிப்பை முடித்துவிட்டு பாகிஸ்தானில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1947 இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு பிரிவினை காலத்தில் இந்தியா வந்தடைந்தார். பின்னர் சிறிது காலம் டெல்லி மற்றும் மும்பையில் அமைந்திருந்த உயர் நீதிமன்றங்களில் வழக்கறிஞராக தன் சட்ட பணியைத் தொடர்ந்தார் ராம்ஜெத் மலானி.
உச்சநீதிமன்றத்தில் புகழ்பெற்ற வழக்கறிஞராக பணியாற்றிய ராம்ஜெத் மலானி 2ஜி அலைக்கற்றை வழக்கு, ராஜீவ் காந்தி கொலை வழக்கு போன்ற முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாடினார். இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் வழக்கறிஞர்களின் ஒருவராக ராம்ஜெத்மலானி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அரசியலில் ராம்ஜெத் மலானி
பாஜக சார்பில் போட்டியிட்டு இரண்டு முறை மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் வாஜ்பாய் பிரதமராக பணியாற்றியபோது அமைச்சரவையில் சட்டம் நீதித்துறை நகர்ப்புற வளர்ச்சித் துறை ஆகிய துறைகளில் அமைச்சராக பணியாற்றினார். 2004ஆம் ஆண்டு பாஜகவுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக அரசியலிலிருந்து வெளியேறி வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். மீண்டும் 2010 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். உடல் நலக்குறைவு காரணமாக ஓய்வில் இருந்த அவர், வழக்கறிஞர் பணிகளையும் மேற்கொள்ளவில்லை. இன்று காலை தன்னுடைய வீட்டில் வயோதிகத்தின் காரணமாக அவர் மரணமடைந்தார். அவருடைய வயது 95 ஆகும்.
மேலும் படிக்க : Tamil Nadu news today live updates : இஸ்ரோவின் முயற்சிக்கு நம்பிக்கை தெரிவித்த நாசா
தலைவர்கள் அஞ்சலி
நரேந்திர மோடி ட்வீட்
இந்தியா மிகச்சிறந்த வழக்கறிஞரையும், நல்ல தலைவரையும் இழந்துவிட்டது. இந்திய பாராளுமன்றத்திலும், நீதிமன்றங்களிலும் அளப்பரிய சேவைகளை அவர் செய்துள்ளார். எது குறித்தும் தன்னுடைய கருத்தை மிகவும் தைரியமாக வெளிப்படையாக பேசும் மனிதர் என்று நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.
சுதந்திர இந்தியாவில் கிரிமினல் குற்றங்களுக்கான சட்டங்களை மறு சீரமைப்பு செய்ததில் முக்கிய பங்கு உங்களுக்கு உண்டு. நீங்கள் ஏற்படுத்திய இந்த வெற்றிடத்தை யாராலும் நிரப்ப இயலாது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உருக்கமாக ட்வீட் செய்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா ராம் ஜெத்மலானியின் இல்லத்திற்கு சென்று அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
வெங்கையா நாயுடு இரங்கல்
துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, தன்னுடைய இரங்கல் குறிப்பில், ஒரு நல்ல நண்பனை நான் இழந்துவிட்டேன். அமைச்சராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த நல்ல நண்பர் அவர். அவருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும் என்று அவர் கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் இரங்கல்
ராம் ஜெத்மலானியின் மரண செய்தி கேட்டு துயருற்றேன். இந்தியா புகழ்பெற்ற, அறிவார்ந்த ஒரு வழக்கறிஞரை இழந்துவிட்டது. எந்த ஒரு பிரச்சனை குறித்தும் தெளிவாக தைரியமாக சாதுர்யமான கருத்தினை அவர் வெளியிடுவார் என்று இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.