வில்லியனூர் சுல்தான்பேட்டையைச் சேர்ந்த முகமது ரபிக் என்பவர் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை காவல் கண்காணிப்பாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கடந்த ஜூன் 5ஆம் தேதி தனது மகள் கேரள வாலிபரால் கடத்தப்பட்டதாகவும், இது தொடர்பாக தனது மனைவி ஷர்மிளா மற்றும் தம்பி முகமது தாஹா ஆகியோர் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
புகார் அளித்தபோது எஸ்.ஐ. சரண்யா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், சுமார் ஐந்து மணி நேரம் கழித்து நள்ளிரவு 12 மணிக்கு விசாரணையைத் தொடங்கியதாகவும் முகமது ரபிக் குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் தகவல் அறிந்து ஜூன் 6ஆம் தேதி, தான் துபாயிலிருந்து இந்தியா வந்ததாகவும், எஸ்.ஐ. சரண்யாவிடம் புகார் குறித்தும், எப்.ஐ.ஆர். நகலும் கேட்டபோது தன்னை திட்டி அனுப்பியதாகவும் முகமது ரபிக் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
தனது மகளைக் கடத்திச் சென்றவர் செல்போன் சிக்னல் முதலில் கேரளாவிலும், பின்னர் மகாராஷ்டிராவிலும், அதன்பின்னர் அசாமிலும் இருந்ததாகவும், இருப்பினும் தனிப்படை அமைத்து தேடவில்லை என்றும் முகமது ரபிக் கூறியுள்ளார். அப்போது தனது மகளைத் தேடிக் கண்டுபிடிக்க பணம் கேட்டதாகவும், இதனையடுத்து ரூ. 5 ஆயிரம் கூகுள் பே (GPay) மூலம் அனுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, லஞ்சம் வாங்கியது தொடர்பாக காவல்துறை இயக்குநரிடம் புகார் அளித்தவுடன், எஸ்.ஐ. சரண்யாவின் கணவரும் பாகூர் எஸ்.ஐ-யுமான பிரபு, அவரது செல்போனில் இருந்து ரூ. 5 ஆயிரம் பணத்தைத் திருப்பி அனுப்பியதாக முகமது ரபிக் தனது புகாரில் கூறியுள்ளார்.
மகளைக் கண்டுபிடிக்காமல் பெண் எஸ்.ஐ. லஞ்சம் வாங்கியதாக உயர் அதிகாரியிடம் புகார் அளித்தவுடன், அக்குற்றத்தை மறைக்க பணத்தைத் திருப்பி அனுப்பிய அவரது எஸ்.ஐ. கணவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முகமது ரபிக் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் புகாரைப் பதிவு செய்து, பெண் எஸ்.ஐ. மற்றும் அவரது கணவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.