மதம் மாறி முஸ்லிம் இளைஞரை திருமணம் செய்துகொண்ட ஹதியாவை, சேலத்தில் உள்ள ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் தங்கி படிப்பை தொடர வேண்டும் என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்த இந்து மதத்தை சார்ந்த அகிலா என்பவர், முஸ்லிம் மதத்திற்கு மாறி ஷஃபீன் ஜஹான் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து, தன் மகள் கட்டாயப்படுத்தப்பட்டு மதம் மாற்றப்பட்டிருக்கிறார் எனக்கூறி, அவரது திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என ஹதியாவின் பெற்றோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், தன் மகள் மதவாத குழுக்களால் முஸ்லிம் மதத்திற்கு மாற கட்டாயப்படுத்தப்பட்டார் என கூறியிருந்தனர். இந்த வழக்கில், ஹதியாவின் திருமணத்தை ரத்து செய்து, அவர் தன் பெற்றோர் உடன் செல்ல வேண்டும் என உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.
இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ஹதியாவின் கணவர் ஷஃபீன் ஜஹான், மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கோரியுள்ளார். இதை விசாரித்த உச்சநீதிமன்றம் ஹதியாவை நவம்பர் 21-ஆம் தேதி ஆஜராகுமாறு உத்தரவிட்டது.
அதன்படி, ஹதியா நேற்று (திங்கள் கிழமை) பலத்த பாதுகாப்புடன் உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில், நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.
வருங்கால திட்டம் குறித்து ஹதியாவிடம் நீதிபதிகள் கேட்ட கேள்விக்கு, “எனக்கு சுதந்திரம் வேண்டும். நான் என்னுடைய நம்பிக்கைக்கு உண்மையாக இருக்க வேண்டும்.”, என கூறினார். மேலும், தன் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் ஹதியா தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது,
சேலம் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி ஹதியா தனது படிப்பை தொடர வேண்டும். அவருக்கு ஏதேனும் பிரச்சனை என்றால், கல்லூரி முதல்வர் நீதிமன்றத்திடம் தெரிவிக்க வேண்டும். கூடிய விரைவிலேயே அவர் கல்லூரிக்கு செல்ல ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இத்தகைய திருமணங்கள் குறித்து என்.ஐ.ஏ. அமைப்பு மேற்கொண்டு வரும் விசாரணை தொடர வேண்டும் என உத்தரவிட்டனர்.
முன்னதாக, இந்த விசாரணை தனி அறையில் ஒளிப்பதிவு செய்யப்பட்டு நடைபெற வேண்டும் என, ஹதியாவின் தந்தை கோரியதை நீதிமன்றம் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.