மோசடி வழக்கில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீருக்கு டெல்லி நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
காசியாபாத்தை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றின் இயக்குனராகவும், விளம்பர தூதராகவும் கெளதம் காம்பீர் செயல்பட்டார். இதனால், நம்பிக்கையான நிறுவனம் என கருதி, பலரும் தலா 2 கோடி அளவில் அந்நிறுவனத்தில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் கட்டுமான பணிகள் தொடங்காததால் கம்பீர் மீது பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
டெல்லியில் உள்ள தலைமை பெருநகர நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், இது தொடர்பாக 17 பேர் மனுக்களை தொடுத்துள்ளனர். அதில், "காசியாபாத் இந்திராபுரத்தில் கடந்த 2011ம் ஆண்டில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 17 வீடுகளை வாங்க 1.98 கோடி தொகையை செலுத்தினோம். ஆனால், வீடு கட்டும் பணி மட்டும் தொடங்கப்படவில்லை.
இதில் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தின் இயக்குனராகவும், விளம்பர தூதராகவும் கெளதம் காம்பீர் செயல்பட்டு வருகிறார். எனவே, இந்த மோசடி புகார் தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரியிருந்தனர்.
இந்த மனு மீது விசாரணை நடத்திய டெல்லி நீதிமன்றம், கம்பீர் நேரில் ஆஜராகும் படி பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி கம்பீர் தாக்கல் செய்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும், புதன்கிழமை (டிச.19) கம்பீர் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், நேற்றும் அவர் ஆஜராகவில்லை.
இதைத்தொடர்ந்து, இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நீதிபதி மனீஷ் குரானா வெளியிட்ட உத்தரவில், "தொடர்ந்து கம்பீர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வருகிறார். இதனால், கம்பீருக்கு எதிராக, ரூ.10,000 தொகையில் பிணையுடன் வெளிவரக் கூடிய வாரண்ட் உத்தரவை வெளியிடுகிறேன்" என்றார்.