உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து வாட்ஸ்அப் குரூப்பில் பயனர் ஒருவர் அவதூறு கருத்து பதிவிட்டதாக கூறப்படும் நிலையில் அந்த குரூப் அட்மின் 35 வயது தொழிலதிபரை உத்தரப் பிரதேச பதோஹி போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். வாட்ஸ்அப் குரூப் உறுப்பினர் கருத்து பதிவிட்ட போதிலும், அட்மின் என்ற முறையில் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
வாட்ஸ்அப் குரூப் அட்மின் சஹாபுதீன் அன்சாரியை போலீசார் கைது செய்தனர். அவர் பதோஹியில் நூல் வியாபாரம் செய்து வருகிறார் என்று கோட்வாலி காவல் நிலைய, நிலைய அதிகாரி (SHO) அஜய் குமார் சேத் தெரிவித்தார்.
சேத் மேலும் கூறுகையில், "வாட்ஸ்அப் குரூப்பில் கருத்து பதிவிட்ட நிலையில் அட்மின் சஹாபுதீன் அந்த பதிவை நீக்காமலும், கருத்து பதிவிட்ட முஸ்லிம் அன்சாரி என்பவரை குரூப்பில் இருந்து நீக்காமலும் அமைதியாக இருந்துள்ளார். இருப்பினும், குரூப்பில் இருந்த பலரும் முஸ்லிம் அன்சாரியின் கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்" என்றார்.
‘நகர் பாலிகா பரிஷத் பதோஹி’ என்று பெயரிடப்பட்ட அந்த வாட்ஸ்அப் குரூப் அப்பகுதி மக்கள் தங்கள் பகுதி பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்ள பயன்படுத்தப்படுகிறது, மேலும் நகர் பாலிகா ஊழியர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் உட்பட 418 பேர் அந்த குரூப்பில் உறுப்பினர்களாக உள்ளனர்.
தற்போது முஸ்லிம் அன்சாரியை போலீசார் தேடி வருகின்றனர். பதோஹி பகுதியைச் சேர்ந்த அன்சாரி, நேபாளத்தில் தொழில் செய்து வருகிறார். பதோஹியில் உள்ள அன்சாரியின் வீட்டில் போலீசார் சோதனை செய்துள்ளனர். அப்போது அவர்கள் குடும்பத்தினர் அன்சாரி நேபாளத்தில் இருப்பதாகவும், மூன்று மாதங்களாக அவர் வீட்டுக்கு வரவில்லை என்றும் கூறினர் என்று சேத் தெரிவித்தார்.
வாட்ஸ்அப் குரூப்பில் முஸ்லிம் அன்சாரி பகிர்ந்த கருத்தை இன்பார்மர் ஸ்கிரீன் ஷாட் எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டு ஆகஸ்ட் 4-ம் தேதி ட்விட்டரில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து சைபர் செல் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டது. அதில் இந்த புகார் உண்மை என்று தெரியவந்தது. இதையடுத்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என சேத் தெரிவித்தார்.
சஹாபுதீன் அன்சாரி மற்றும் முஸ்லீம் அன்சாரி மீது ஐ.பி.சி பிரிவுகள் 500 (அவதூறு), 504 (அமைதியைக் கெடுக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு), 505 (2) (பகை, வெறுப்பு அல்லது தீமையை உருவாக்கும் அல்லது ஊக்குவிக்கும் ) 506, குற்றவியல் சட்டம் (திருத்தம்) சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“