![shiv sena, Eknath Shinde, Uddhav Thackeray, Shinde Sena, சிவ சேனா, ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே, Uddhav Sena, Balasaheb Thackeray, Sanjay Raut, Tamil Indian Express](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2023/02/Uddhav-Eknath.jpg)
1971-ல் உச்ச நீதிமன்றம், போட்டிக் கட்சிப் பிரிவுகளுக்கு இடையேயான சொத்து தகராறுகளுக்கு உரிமையியல் நீதிமன்றங்களே பொருத்தமான இடம் என்று உறுதி செய்தது; இதற்கிடையில், ஷிண்டே, சிவசேனாவின் சொத்து, கட்சி நிதி அல்லது சொத்து மீது உரிமை கோரப் போவதில்லை என்று கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சிவசேனா கட்சியின் பெயரையும் சின்னத்தையும் வழங்கிய தேர்தல் ஆணையத்தின் பிப்ரவரி 17-ம் தேதி முடிவுக்குப் பிறகு, சிவசேன கட்சியின் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை யார் கட்டுப்படுத்துவது என்பது அடுத்த பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. இரு தரப்பும் நிதி மற்றும் சொத்துக்களுக்கு உரிமை கோர முடிவு செய்தால், இந்த விவகாரத்தை உரிமையியல் நீதிமன்றம் முடிவு செய்யும்.
ஏக்நாத் ஷிண்டே அணிக்கும் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அணிக்கும் இடையே முடிவெடுக்கும் போது, தேர்தல் ஆணையம் பெரும்பான்மை சோதனையை நம்பியிருந்தது. சிவசேனாவின் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி-க்கள் மற்றும் எம்.பி.க்களின் ஆதரவு ஏக்நாத் ஷிண்டேவுக்கு இருந்தது கண்டறியப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு பதிலளித்த உத்தவ் தாக்கரே, கட்சியின் நிதி எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பதை தீர்மானிப்பதில் தேர்தல் அமைப்புக்கு எந்தப் பங்கும் இல்லை என்று திங்கள்கிழமை கூறினார். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஏதேனும் முடிவெடுத்தால், தனது அணி அதை நீதிமன்றத்தில் சவால் செய்யும் என்றும் அவர் கூறினார்.
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு எந்தப் பங்கும் இல்லை என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தனர். ஜனவரி 1971-ல் காங்கிரஸ் அணிகளுக்கு இடையேயான தகராறில் ஆணையம் தீர்ப்பளித்தபோது, தேர்தல் சின்னங்கள் (சின்னங்களுக்கான இடத்தை ஒதுக்குவது மற்றும் சின்னங்கள் ஒதுக்கீடு) உத்தரவு 1968-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்துவதில் மட்டுமே உத்தரவிட முடியும் என்று கூறியது.
நவம்பர், 1971-ல் சாதிக் அலி வழக்கில் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், “இந்த வகையில் கூறப்படும் கோரிக்கையானது, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல், சின்னங்கள் தொடர்பான நோக்கத்திற்காக மட்டுமே உள்ளது. தேர்தல் ஆணையத்தின் முடிவு இந்த வரையறுக்கப்பட்ட விஷயத்திற்கு மட்டுமே பொருந்தும். தேர்தல் ஆணையம் பத்தி 15-ன் கீழ் விஷயத்தை தீர்மானிக்கும்போது சொத்து தொடர்பான சர்ச்சைகளை முடிவு செய்யாது. சொத்து தொடர்பான சர்ச்சைகளை தீர்ப்பதற்கான சரியான இடம் உரிமையியல் நீதிமன்றங்கள் தான்.
தேர்தல் ஆணைய உத்தரவு பத்தி 15-ல், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிளவுபட்ட அணிகளுக்கு இடையேயான சச்சரவுகளைத் தீர்ப்பதற்கான அதன் அதிகாரத்தைக் குறிக்கிறது. அதில், “அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் போட்டி பிரிவுகள் அல்லது அணிகள் உள்ளன என்று தேர்தல் ஆணையம் தன்னிடம் உள்ள தகவலில் திருப்தி அடைந்தால், அவை ஒவ்வொன்றும் அந்தக் கட்சி என்று கூறிக்கொள்ளும் போது, கிடைக்கக்கூடிய அனைத்து உண்மைகளையும் சூழ்நிலைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்ட பிறகு, தேர்தல் ஆணையம், வழக்கு மற்றும் பிரிவுகள் அல்லது அணிகள் மற்றும் பிற நபர்களின் பிரதிநிதிகளைக் கேட்டு, அத்தகைய ஒரு போட்டி பிரிவு அல்லது அணி அல்லது அத்தகைய போட்டி பிரிவுகள் அல்லது அணிக்ள் எதுவும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்று முடிவு செய்து, தேர்தல் ஆணையத்தின் முடிவு அத்தகைய அனைத்து போட்டி பிரிவுகள் அல்லது அணிகளின் மீது கட்டும்.” என்று கூறுகிறது.
தேர்தல் ஆணையத்தின் பிப்ரவரி 17-ம் தேதி உத்தரவுக்கு எதிராக உத்தவ் தாக்கரே அணி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தாலும், சிவசேனா கட்சியின் நிதி மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்க இரு தரப்பினரும் நடவடிக்கை எடுக்கிறார்களா என்பதைப் பார்க்க வேண்டும். மும்பையில் செவ்வாய்கிழமை நடைபெற்ற சிவசேனா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில், சிவசேனாவின் சொத்து, கட்சி நிதி அல்லது எந்த சொத்து மீது தனது கட்சி உரிமை கோராது என்று ஏக்நாத் ஷிண்டே கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.