/indian-express-tamil/media/media_files/2025/01/22/3pqqFhOQCgx2g1YKE7bP.jpg)
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி. (சங்கதீப் பானர்ஜி மற்றும் பிரதீப் தாஸின் எக்ஸ்பிரஸ் கோப்பு புகைப்படங்கள்)
“ஆகஸ்ட் 15, 1947 இல் இந்தியா ஆங்கிலேயர்களிடமிருந்து அரசியல் சுதந்திரம் பெற்ற பிறகு, எழுதப்பட்ட அரசியலமைப்பு வரைவு உருவாக்கப்பட்டது… ஆனால் அந்த நேரத்தில் இந்தியாவின் ஆன்மாவுக்கு ஏற்ப ஆவணம் உருவாக்கப்படவில்லை… பல நூற்றாண்டுகளாக துன்புறுத்தல்களை எதிர்கொண்ட இந்தியாவின் உண்மையான சுதந்திரம், அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட நாளில் அடையப்பட்டது,” என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஒரு வாரத்திற்கு முன்பு கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்க: Why Ram Temple figured big in Mohan Bhagwat, Narendra Modi’s first messages for 2025
சில நாட்களுக்குப் பிறகு, இந்த ஆண்டின் முதல் மன் கி பாத் உரையில், பிரதமர் நரேந்திர மோடி கூறினார்: ”ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடந்த இந்த துவாதசி (சந்திர நாட்காட்டியில் ஒரு புனிதமான நாள்) என்பது இந்தியாவின் கலாச்சார உணர்வை மீண்டும் நிலைநாட்டும் துவாதசி ஆகும்.”
அயோத்தி கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு பிரதமர் தலைமை தாங்கி ஓராண்டுக்குப் பிறகு, பா.ஜ.க.,வின் நீண்ட பிரச்சாரத்தின் முடிவைக் குறிக்கும் வகையில், அதைச் சுற்றியுள்ள உரையாடலை மீண்டும் தொடங்க முயற்சி நடப்பதாகத் தெரிகிறது. பா.ஜ.க.,வின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, கும்பாபிஷேகத்திற்குப் பிறகு நடைபெற்ற மக்களவைத் தேர்தல்கள் கட்சிக்கு அரசியல் பலனைத் தரவில்லை - உண்மையில், பா.ஜ.க, உத்தரப் பிரதேசத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதும் அதன் வீழ்ச்சியைக் கண்டது, மேலும், அயோத்தி உள்ளடங்கிய பைசாபாத் மக்களவைத் தொகுதியைக் கூட இழந்தது.
உ.பி.யில், 2027 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கும் நேரத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசாங்கத்தின் இந்துத்துவா சுருதி அதிகரித்து வரும் நிலையில், மோகன் பகவத் மற்றும் மோடியின் கருத்துக்கள் வந்துள்ளன. அதேநேரம் சமாஜ்வாதி கட்சி மீண்டும் பா.ஜ.க.,வுக்கு நல்ல போட்டியை அளிக்க முடியும் என்று நம்புகிறது.
குறிப்பாக காங்கிரஸ் அரசியலமைப்பு விதிகளின் உண்மையான பாதுகாப்பாளராக தன்னை முன்னிறுத்தும் நிலையில், ஆர்.எஸ்.எஸ் தலைவரின் அறிக்கையானது அரசியலமைப்பை மையமாகக் கொண்ட எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தையும் விமர்சிக்கிறது, என்று ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. காங்கிரஸின் சொந்த வரலாற்றைப் போலல்லாமல், ஆர்.எஸ்.எஸூக்கு "சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கும் இல்லை" என்ற காங்கிரஸின் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதாகவும் இது உள்ளது.
பா.ஜ.க தலைவர்களின் கூற்றுப்படி, அரசியல் சுதந்திரத்தின் அதே பீடத்தில் "கலாச்சார இறையாண்மையை" வைப்பதன் மூலம், மதம் என்று வரும்போது மோகன் பகவத், காங்கிரஸின் பாதிக்கப்படக்கூடிய பக்கத்தைத் தாக்கினார். ”குஜராத்தில் சோம்நாத் கோயிலை புனரமைக்க காங்கிரஸ் அரசு (ஜவஹர்லால் நேரு தலைமையிலான) முயற்சி எடுத்தது ஏன், அதற்கு மகாத்மா காந்தி ஏன் ஆதரவளித்தார்? அரசியல் சுதந்திரம் தான் எல்லாம் என்றால், அந்தத் தலைவர்கள் அதைச் செய்திருக்க மாட்டார்கள்” என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஒருவர் வாதிடுகிறார்.
பா.ஜ.க.,வில் உள்ள சிலர் மோகன் பகவத்தின் அறிக்கையில் "மசூதிகளுக்கு அடியில் உள்ள கோவில்கள்" பற்றி எழுந்துள்ள புதிய கூற்றுகளுக்கு கண்டனம் தெரிவிக்கின்றனர். ஜூன் 2022 இல், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி தொடர்பான சமீபத்திய பதட்டங்களுக்கு மத்தியில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் "ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தைத் தேடுபவர்களை" பற்றி கேள்வி எழுப்பினார், மேலும் சங்கம் இந்த பிரச்சினையில் "கிளர்ச்சிக்கு" ஆதரவாக இல்லை என்று கூறினார்.
இருப்பினும், கடந்த இரண்டு மாதங்களாக, சம்பலில் பேரரசர் பாபர் காலத்தைச் சேர்ந்த ஒரு மசூதியின் கீழ் உள்ள ஒரு பழமையான கோயில் பற்றி கூறப்பட்டதால், இதே போன்ற குற்றச்சாட்டுகள் வருகின்றன, குறிப்பாக உ.பி. முழுவதிலும் இருந்து, இதுபோன்ற பல வழக்குகளுக்குப் பின்னால் சங்கத்தின் துணை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். இந்தியாவின் கலாச்சார வரலாற்றில் அயோத்தி கோயிலை ஒரு மூலக்கல்லாகக் குறிப்பதன் மூலம், மோகன் பகவத் புதிய உரிமைகோரல்களின் அவசியத்தை குறைக்க முற்பட்டதாக பா.ஜ.க தலைவர்கள் தெரிவித்தனர்.
“இன்றைய சூழ்நிலையில், இந்தப் பிரச்சினைகளில் கிளர்ச்சி அல்லது ஆக்கிரமிப்புப் பாதையைத் தொடங்குவதைத் தவிர வேறு வழிகள் உள்ளன. நீங்கள் வேறு வழிகளிலும் முயற்சி செய்யலாம். எந்த கோப்பும் மூடப்பட்டு விட்டது என்று அர்த்தம் இல்லை, ஆனால் அங்கு செல்வதற்கு ஒரு செயல்முறை இருக்கலாம்,” என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஒருவர் கூறுகிறார்.
மோகன் பகவத்தின் உரையில் வாசிக்கப்படும் மற்றொரு செய்தி, சங்பரிவாரின் நீண்டகாலக் கனவான அயோத்தி ராமர் கோயிலை நிறைவேற்றுவதில் மோடி மற்றும் அவரது அரசாங்கத்தின் பங்கை அவர் அங்கீகரிப்பது. லோக்சபா தேர்தலுக்குப் பிறகு, சங்கத்திற்கும் பா.ஜ.க.,விற்கும் இடையிலான பிளவு, கட்சியின் பெரும்பான்மை எண்ணிக்கையில் செங்குத்தான வீழ்ச்சிக்கு நேரடியாக பங்களித்ததாக நம்பப்பட்டபோது, இருவரும் விரிசல்களை மூட முயற்சித்தனர்.
கட்சியின் தற்போதைய அமைப்பு மறுசீரமைப்பில், அஸ்ஸாம் மற்றும் கோவாவில் சமீபத்தில் பிரதிபலித்தது போல, மாநிலத் தலைவர்களாக ஆர்.எஸ்.எஸ் பரிந்துரைகளுக்கு இடமளிப்பதில் பா.ஜ.க கவனமாக உள்ளது. இரண்டு முறை லோக்சபா எம்.பி.யாக இருந்த அஸ்ஸாம் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட திலிப் சைகியா மற்றும் புதிய கோவா தலைவராக நியமிக்கப்பட்ட தாமு ஜி நாயக் ஆகிய இருவரும் ஆழமான ஆர்.எஸ்.எஸ் வேர்கள் மற்றும் சங் தலைவர்களுடன் நல்ல தொடர்பு கொண்டவர்கள்.
கட்சி அமைப்பு நடவடிக்கையின் முடிவில் தேர்ந்தெடுக்கப்படும் கட்சித் தலைவர் உள்ளிட்ட புதிய அணி ஆர்.எஸ்.எஸ் முத்திரையை தாங்கியிருக்கும் என்று பா.ஜ.க உள்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மோடி இன்னும் கூடுதலான பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு திரும்பிய 2019 மற்றும் பெரும்பான்மை இல்லாத 2024 க்கு இடையில், பா.ஜ.க தலைமை சில சமயங்களில் சங்கத்தின் விருப்பத்திற்கு மாறாக செயல்பட்டதாகக் காணப்பட்டது.
ஜே.பி. நட்டாவுக்குப் பதிலாக யார் புதிய பா.ஜ.க தலைவர் என்பது குறித்து இன்னும் தெளிவு இல்லையென்றாலும், அனைத்துப் பெயர்களும் ஆர்.எஸ்.எஸ் பின்னணியைக் கொண்டவை - சிவராஜ் சிங் சவுகான் அல்லது மனோகர் லால் கட்டார், முன்னாள் முதல்வர்கள் மற்றும் தற்போதைய கேபினட் அமைச்சர்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.